கோவையில் தந்தை பெரியார் பெயரில் நூலகம் – ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு

ev velu
Spread the love

தமிழக பொதுப்பணி துறை அமைச்சர் ஏ.வ.வேலு இன்று கோவை காந்திபுரம் பகுதியில் நடைபெற்று வரும் தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத் திட்டத்தின் கட்டுமானப்பணிகளை ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கு பின் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது​, “கோவை நகரில் தந்தை பெரியார் பெயரில் 7 ஏக்கர் பரப்பளவில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கட்டுமான பணிகள் ரூ.300 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல்வர் இதற்கான அடிக்கல் நாட்டிய போது, நூலகம் 2026 ஜனவரியில் திறக்கப்படும் என அறிவித்திருந்தார். இதனை முன்னிட்டு, பணிகள் திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்பதால், ஒவ்வொரு மாதமும் பணி நிலை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்த நூலகம் நீண்ட காலம் நிலைத்து இருக்கும் வகையிலும், தரமான கட்டுமானத்துடன் உருவாக்கப்படவுள்ளது. இதற்கான அனைத்து கட்டிட அனுமதி சான்றிதழ்களும் பெறப்பட்டுள்ளன. ரூ.300 கோடி மதிப்பிலான இத்திட்டத்தில், ரூ.250 கோடி கட்டிட பணிக்காகவும், ரூ.50 கோடி புத்தகங்கள், கணினிகள் உள்ளிட்ட உபகரணங்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. நூலகத்தில் 7 தளங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன, இதில் தரை தளம் இருக்காது. மேலும், 200 கார்கள் மற்றும் 450 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியும் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல் இரண்டு தளங்களுக்கு எஸ்கலேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளதுடன், மற்ற தளங்களுக்கு லிப்ட் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இத்துடன், 300 பேர் அமரக்கூடிய கலையரங்கம், குழந்தைகள் நூலகம், தமிழ் மொழிக்கான தனிப்பிரிவு உள்ளிட்டவை உருவாக்கப்படுகின்றன. கட்டுமான பணிகளில் புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு, வேலைகள் வேகமாக முன்னேற்றம் அடைந்துவருகின்றன. திட்டமிட்டபடி, 2026 ஜனவரியில் நூலகம் திறக்கப்படும்.

மேலும், தமிழகத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாக பழமைவாய்ந்த கட்டிடங்கள், முகலாயர் கால கட்டிடங்கள் உள்ளிட்டவை புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் பாரம்பரியத்தை காக்க, பழைய கட்டிடங்களை போலவே பழமைமுறையுடன் கட்டுமானம் செய்யப்படுகிறது. இந்த கட்டிடங்களின் பன்முக சிறப்பை காக்க சுண்ணாம்பு கலவை போன்ற பாரம்பரிய கட்டுமான முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், பணிகள் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் நிலையில் உள்ளன. எனவே, இதனை அவசரமாக முடிக்க முடியாது என்பதால், கட்டுமான பணிகளை விரைவாக மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எல் & டி பைபாஸ் சாலை தொடர்பாக, ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியிடம் அணுகி ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், கடந்த 1ம் தேதி ரூ.99 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை உருவாக்கி முடித்தவுடன், மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்காலத்தில், இந்த சாலை 6 வழிச்சாலையாக மாற்றப்படும்.

கோவை மேற்கு புறவழிச்சாலை பணிகள் மூன்று கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ளன. முதல்கட்ட பணிகள் தற்போது நடைமுறையில் உள்ளது. இரண்டாவது கட்ட பணிக்காக 98% நிலம் எடுப்பு முடிவடைந்துள்ளதால், மே மாதத்தில் ஒப்பந்தம் வழங்க வாய்ப்பு உள்ளது. மூன்றாம் கட்ட பணிகளுக்கான நிலம் எடுப்பும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அவினாசி மேம்பால திட்டத்தில் மேலும் 3 பில்லர்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ரயில்வே துறையின் அனுமதி பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனுமதி கிடைத்ததும், இரண்டு மாதங்களுக்குள் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்ததாரர்கள் ஆய்வு கூட்டம் வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ளது.

இதேபோல், தண்ணீர்பந்தல் மேம்பாலம் தொடர்பாக நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதால், பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. நீலிகோணம்பாளையம் மேம்பால பணிகள் தொடர்பாகவும் விரைவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.​” என்றார்