தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் கோவை மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் ஜல்லிக்கட்டு போட்டி, ஞாயிற்றுக்கிழமை கோவை செட்டிபாளையம் பைபாஸ் சாலையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் 800 காளைகளை அவிழ்த்து விடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாடுகளைப் பிடிக்க 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பதிவு செய்துள்ளனர். போட்டியை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடக்க நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
போட்டியை பார்வையிட பொதுமக்களுக்கு பார்வைத்திடல் வசதிகள், குடிநீர் வசதிகள் ஆகியவை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. போட்டிக்குத் தேவையான மருத்துவ அணியும், கால்நடை சிகிச்சைக்குழுவும், அவசரசிகிச்சைக்கான ஏற்பாடுகளுடன் தயார் நிலையில் இருக்கின்றன.
மேலும், பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த விழாவில் கோவை மாநகராட்சி ஆணையாளர், கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு போட்டியை பார்வையிட்டு வருகின்றனர்.
போட்டியில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கும், மாடுகளின் உரிமையாளர்களுக்கும் நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்பட உள்ளன.
Leave a Reply