கோவையில் சுமை வண்டி இழுக்கும் தொழிலாளியின் மகள் 560 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார்.
கோவை தெலுங்குப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் பால்பாண்டியன்- முருகேஸ்வரி தம்பதியினர். பால்பாண்டியன் சுமை வண்டி இழுக்கும் பணி செய்து வருகிறார். முருகேஸ்வரி லோடு வண்டி ஓட்டுனராக உள்ளார். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் ஸ்ரீ ராஜலட்சுமி, ராஜவீதி பகுதியில் உள்ள துணி வணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு உயிரியல் மற்றும் கணிதவியல் பாடப்பிரிவில் படித்து வந்தார்.
இவர் நடைபெற்று முடிந்த பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றதோடு 600 க்கு 560 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதுகுறித்து மாணவி ஸ்ரீ ராஜலட்சுமி கூறும் போது, “நான் எனக்கு படிக்க உதவிய பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவராக வேண்டுமென்பது எனது கனவு. அதற்காக நீட் தேர்வு எழுதி உள்ளேன். எங்கள் குடும்ப சூழலை கருதி மருத்துவப் படிப்புக்கு தேவையான உதவி செய்ய யாராவது முன்வர வேண்டும்.” என்று வேண்டுகோள் விடுத்தார்.
Leave a Reply