, , ,

கோவில் பார்க்கிங் கட்டணத்தில் பகல் கொள்ளை; கண்டுகொள்ளாத அதிகாரிகள்

Spread the love

தொண்டாமுத்தூர் ; பேரூர் பட்டீவரர் கோவில் பார்க்கிங் கட்டணத்தில், விதிமுறைகளை மீறி, அதிக கட்டணம் வசூலித்து, பகல் கொள்ளை நடந்து வருவதை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

கோவையில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகவும், ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவிலாகவும்,பேரூர் பட்டீஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவில், உதவி கமிஷனர் அந்தஸ்திலான அதிகாரிகளால் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது. பேரூர் பட்டீஸ்வரர் கோவில் மற்றும் பேரூர் படித்துறைக்கு, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் முன்பு உள்ள கோவிலுக்கு சொந்தமான மைதானத்தில் பார்க்கிங் செய்யப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க, கோவில் சார்பில், தனியாருக்கு ஏலம் விடப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த ஏல ஒப்பந்தத்தில், இருசக்கர வாகனங்களுக்கு, 5 ரூபாயும், கார், ஜீப், மினி லாரி போன்ற நான்கு சக்கர வாகனங்களுக்கு, 15 ரூபாயும், டூரிஸ்ட் டெம்போ, மினி பஸ் போன்ற பெரிய வாகனங்களுக்கு, 50 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால், ஏலம் ரத்து செய்யப்பட்டு, கட்டிய தொகைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என, ஏல ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் முன்பு உள்ள மைதானத்தில் பக்தர்கள், பார்க்கிங் செய்யும் வாகனங்களுக்கு, இருசக்கர வாகனங்களுக்கு, 10 ரூபாயும், நான்கு சக்கர வாகனங்களுக்கு, 50 ரூபாயும், வேன்களுக்கு, 100 ரூபாயும், டூரிஸ்ட் பஸ்களுக்கு, 200 ரூபாயும் கட்டணம் வசூலித்து வருகின்றனர்.

அதேபோல, கோவில் முன்பு உள்ள மைதானத்தில் மட்டும் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க ஏலம் விடப்பட்டுள்ள நிலையில், படித்துறை நொய்யல் ஆற்றுக்கு செல்லும் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கும் பார்க்கிங் கட்டணம் வசூலித்து, பகல் கொள்ளை நடப்பதாகவும், அதிகாரிகள் இதனைக் கண்டு கொள்ளாமல் உள்ளதாகவும், பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அறநிலையத்துறை துணை கமிஷனர் மற்றும் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உதவி கமிஷனர் (பொ) விமலாவிடம் கேட்டபோது,பார்க்கிங் கட்டணம் கூடுதலாக வசூலிப்பதாக இன்று புகார் வந்துள்ளது.

நான், சேலம் மாவட்டத்தில் நகை சரிபார்ப்பு துணை கமிஷனராக இருந்து, கூடுதல் பொறுப்பில் பேரூர் கோவிலை கவனித்து வருகிறேன். சேலத்தில் நாளை ஒரு கோவில் கும்பாபிஷேகம் உள்ளதால், புகாருக்குள்ளான ஏல தாரரை, வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வர நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். அதிக கட்டணம் வசூலித்தது உறுதியானால், ஏலம் ரத்து செய்யப்படும்,என்றார்.