கோவை மாநகருக்கு சிறுவாணி, பில்லூர் அணைகளின் தண்ணீரே, நீர் ஆதாரங்களாக விளங்கி வருகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்தில் 863.40 மீட்டர் அளவில் உள்ள சிறுவாணி அணையின் மூலம் கோவையில் உள்ள 30 வார்டுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அதே போல பில்லூர் குடிநீர் திட்டம் ஒன்று, இரண்டு, மூன்று என தீட்டப்பட்டு கோவை மாநகராட்சி முழுவதும், பல்லடம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பல்வேறு கிராமங்களுக்கும் தண்ணீர் வினியோகம் நடைபெற்று வருகிறது.
பில்லூரின் மூன்று திட்டங்களின் மூலம் சுமார் 43 கோடி லிட்டர் நீர் நாள் ஒன்றுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மக்கள் தொகை குறைவாக இருந்த காலகட்டங்களில் தினம்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
அது நாளடைவில் மூன்று நாட்கள் நான்கு நாட்கள் என ஆகி தற்போது பத்து நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் என்ற அளவில் உள்ளது.
இந்த முறை சில பகுதிகளில் 20 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் அணை பிடிப்பு பகுதிகளில் நீர்மட்டத்தின் அளவு குறைந்து வருகிறது.
இதனால் குடிநீர் விநியோகம் சீராக இல்லாத நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
உள்ளூர் நீர் ஆதாரங்களிலும் தண்ணீர் இல்லாத நிலையில்,மாநகராட்சி நிர்வாகம் சார்பில் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.
தண்ணீர் பல நாட்களாக வராத காரணத்தால், பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுபட துவங்கியுள்ளனர்.
இந்த கோடை காலத்தின் குடிநீர் தேவையை சமாளிக்க மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால நடவடிக்கைகளை தற்போதே தொடங்க வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
Leave a Reply