கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு: ஜெயலலிதாவின் நெருங்கிய உதவியாளர் பூங்குன்றன் சிபிசிஐடி விசாரணையில் ஆஜர்

kodanadu estate
Spread the love

கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளர் கணியன் பூங்குன்றன் இன்று கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

கடந்த மார்ச் மாதத்தில், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் வி.என். சுதாகரன் மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட பல முக்கியர்களிடம் சிறப்பு புலனாய்வுத்துறை தீவிர விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அந்த நேரத்தில், பங்களாவில் இருந்ததாக கூறப்படும் மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் பணம் குறித்து கேள்விகள் எழுந்தன. இதுவரை இந்த வழக்கில் 250க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.

2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி, கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் பாதுகாவலர் ஓம் பகதூர் கொடூரமாக கொல்லப்பட்டார். மேலும், கிருஷ்ண பகதூர் என்ற மற்றொரு காவலாளி பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார். முக்கிய குற்றவாளி கனகராஜ், பின்னர் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார்.

இந்நிலையில், குற்றவாளிகளின் தொலைபேசி உரையாடல்கள், மின்னணு சாதனங்கள் தொடர்பான தகவல்களை பெற Interpol-இன் உதவியை CB-CID நாடியுள்ளது. மேலும், இன்னும் பல சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை திரட்டும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த சூழலில், பங்களா மற்றும் அதிலிருந்து கொள்ளை போன பொருட்கள் குறித்து விசாரணை நடத்த பூங்குன்றன் இன்று சிபிசிஐடி விசாரணையில் ஆஜராகியுள்ளார். ஜெயலலிதா காலத்தில் மிக நெருக்கமாக இருந்த பூங்குன்றன், அவரது மறைவுக்குப் பிறகு அரசியல் வட்டாரத்திலிருந்து ஒதுங்கி, தற்போது தஞ்சாவூரில் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பூங்குன்றனின் ஆஜராகும் நடவடிக்கை, கொடநாடு வழக்கில் புதிய தகவல்களை வெளிக்கொணரலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.