இந்திய அரசின் மத்தியக் கல்வி அமைச்சகத்தின் நிதிநல்கையுடன் இங்கிலாந்தில் உள்ள எக்சீட்டர் பல்கலைக்கழகமும் கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் துறையும் இணைந்து நடத்திய இந்தியா இங்கிலாந்து நாடுகளுக்கு இடையேயான “நொய்யல் ஆற்றில் ஜவுளிக் கழிவுகள் மாசுபாட்டின் பாதிப்புகளும் பாசி மற்றும் கிராபீன் சவ்வு மூலம் சரிசெய்தல் பற்றிய சமூகப் பொருளாதார பகுப்பாய்வும்” என்னும் பொருண்மையிலான இரண்டு நாள் பயிலரங்கத்தின் தொடக்கவிழா கல்லூரியின் கருத்தரங்கக்கூடத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் எக்சீட்டர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் பயிலரங்கின் முதன்மை ஆய்வாளருமான முனைவர் டேவிட் இயன் பென்சன் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார். அவர்தம் சிறப்புரையில், “அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆறுகளில் ஏற்படும் மாசுபாடுகளை எவ்வாறு தீர்க்கலாம் என்பதற்கான வழிமுறைகளையும் சுற்றுச்சூழலில் ஏற்பட்டுள்ள மாசுகளையும் அச்சுறுத்தல்களையும் விரிவாக எடுத்துரைத்தார்.
கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் சி.ஏ.வாசுகி அவர்கள் தலைமையுரை ஆற்றினார். அவரது உரையில், “அனைத்து ஆய்வுகளும் சமூகத்திற்குப் பயன்படுகின்ற வகையில் அமையவேண்டும் என்றும், கோவையில் பாயும் நொய்யல் ஆறு சங்ககாலம் முதல் சிறப்பு பெற்றிருந்தது என்றும், வாஸ்கோடாகாமா இந்தியாவைக் கண்டறிவதற்கு முன்பிருந்தே ரோமானியர்களும் கிரேக்கர்களும் நம் நாட்டுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர் என்றும் அதற்குச் சான்றாக நொய்யல் ஆற்றங்கரையில் ஏராளமான ரோமானிய நாணயங்கள் கிடைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் மேற்குத்தொடர்ச்சி மலை பல்லுயிரினப் பெருக்கத்திற்கு ஏதுவாக இருப்பதாகவும்” கூறினார்.
அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து டீசைடு பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் செந்திலரசு சுந்தரம் அவர்கள் பயிலரங்க நோக்கவுரையாற்றினார். கல்லூரியின் ஆராய்ச்சிப்புல முதன்மையர் முனைவர் எஸ். பால்சாமி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் மா. லச்சுமணசாமி அவர்கள் முன்னிலை வகித்தார். முன்னதாகத் ஒருங்கிணைப்பாளருமான தமிழ்த்துறை முனைவர் உதவிப்பேராசிரியரும் முத்துக்குமார் பயிலரங்க அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
தொடக்கவிழாவைத் தொடர்ந்து பயிலரங்க அமர்வுகள் நடைபெற்றன. இந்த அமர்வுகளில் தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் சூழல் காப்பு அமைப்புகளிலும் இருந்து வருகைதந்த பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கருத்துரை வழங்கினர்.
Leave a Reply