கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் சூழலில், அந்த மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் மருத்துவக் கண்காணிப்பு மற்றும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பீதி காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கேரள மாநிலத்தின் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்ட கோழிகள் மற்றும் வாத்துகள் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்தன. இதனைத் தொடர்ந்து, அவற்றின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் பறவைக் காய்ச்சல் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அந்தப் பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் கோழி, காடை, வாத்து இறைச்சி மற்றும் முட்டைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, கேரளாவை ஒட்டியுள்ள கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வும், பீதியும் அதிகரித்துள்ளது.
கேரளாவுக்கு அருகிலுள்ள கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் இயங்கி வருகின்றன. இப்பண்ணைகளில் கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க பண்ணை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், தமிழக–கேரள எல்லையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தின் கக்கனல்லா, நம்பியார் குன்னு, தாளூர், சோலாடி, பூலகுன்னு, நாடுகாணி மற்றும் பாட்டவயல் உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில், ஒரு கால்நடை உதவி மருத்துவர் தலைமையில் கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட குழுவினர் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கேரளாவிலிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு கோழிகளை கொண்டு வர தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



Leave a Reply