மருத்துவ இயற்பியலாளர்கள் (Medical Physicists) என்போர் மருத்துவத்தில் இயற்பியல் (Physics) கோட்பாட்டைப் பயன்படுத்தி கதிர்வீச்சு சிகிச்சை, கதிர்வீச்சு பாதுகாப்பு மற்றும் இமேஜிங் போன்ற துறைகளில் செயல்படும் மருத்துவ நிபுணர்கள் ஆவர். சிகிச்சையின் திறன் மேம்படுத்துதல், கதிர்வீச்சு ஆபத்துக்களைக் குறைத்தல், சிகிச்சையின் தரத்தை மேம்படுத்துதல், நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவை இவர்களது பணியாகும்.
இந்திய மருத்துவ இயற்பியலாளர்கள் (Medical Physicists) சங்கத்தின் ஆண்டு மாநாடு – AMPICON 2024 தமிழ்நாடு புதுச்சேரி பிரிவு – தென் இந்தியா முழுவதிலுமிருந்து 250க்கும் மேற்பட்ட மருத்துவ இயற்பியலாளர்களை ஒன்றிணைத்து வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த மாநாடு நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்வது, துறைசார்ந்த வளர்ச்சி மேம்படுத்துவது மற்றும் மருத்துவ இயற்பியலில் சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றிய விவாதங்களுக்கு ஒரு முக்கிய தளமாக விளங்கியது.
கோவை அவினாசி ரோட்டில் உள்ள கேஎம்சிஹெச் மருத்துவமனையில் நடத்தப்பட்ட இந்த ஒரு நாள் மாநாட்டில், கதிர்வீச்சு சிகிச்சை, இமேஜிங் தொழில்நுட்பங்கள், கதிர்வீச்சு பாதுகாப்பு மற்றும் புற்றுநோய் சிகிச்சையில் தர உறுதிப்பாடு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கிய நிபுணர் தலைமையிலான அமர்வுகள், குழு விவாதங்கள் மற்றும் மின்னணு போஸ்டர் அமர்வுகள் இடம்பெற்றன.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கலந்து கொண்ட புகழ்பெற்ற நிபுணர்கள் இந்தத் துறையில் வளர்ந்து வரும் முன்னேற்றங்கள் மற்றும் சவால்கள் பற்றிய தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்த மாநாட்டிற்கு டாக்டர். நல்லா ஜி. பழனிசாமி, தலைவர், கேஎம்சிஹெச், தலைமை தாங்கினார். டாக்டர் தவமணி பழனிசாமி, துணைத் தலைவர், டாக்டர் அருண் பழனிசாமி, செயல் இயக்குனர், டாக்டர் சுப்பிரமணியம், மாநாடு ஏற்பாட்டு தலைவர், டாக்டர் பரணிதரன், இந்திய மருத்துவ இயற்பியலாளர்கள் சங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புற்றுநோய் மருத்துவம் மற்றும் சிகிச்சைகளின் வெளிப்பாடுகளை மேம்படுத்துவதில் மருத்துவ இயற்பியலின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை இந்த மாநாடு அடிக்கோடிட்டுக் காட்டியது. மருத்துவ இயற்பியலாளர்கள் தொழில் துறை தலைவர்களுடன் கூடி ஆலோசிப்பதற்கும், ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளைப் பரிமாறிக்கொள்வதற்கும், மருத்துவ இமேஜிங் மற்றும் கதிர்வீச்சு சிகிச்சையில் உள்ள சிக்கலான சவால்களுக்கு புதுமையான தீர்வுகளை ஆராய்வதற்கும் இந்த மாநாடு ஓர் அரிய வாய்ப்பை வழங்கியது.
இந்த மாநாடு வெற்றிகரமாக நடைபெற பங்களித்த அனைத்து பங்கேற்பாளர்கள், மற்றும் ஆதரவு நிறுவனங்களுக்கும் டாக்டர். நல்லா ஜி. பழனிசாமி, தலைவர், கேஎம்சிஹெச், தனது பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
Leave a Reply