,

​கேஎம்சிஹெச் மருத்துவமனையில் இளம் நரம்பியல் மருத்துவர்களுக்கு முதுகுத்தண்டு வட அறுவை சிகிச்சை பயிற்சி வகுப்பு​

kmch
Spread the love

கேஎம்சிஹெச் மருத்துவமனை மற்றும் கேஎம்சிஹெச் மருத்துவக் கல்லூரி சார்பில் இளம் நரம்பியல் மருத்துவர்களுக்கான முதுகுத்தண்டு வட அறுவை சிகிச்சை குறித்து இரண்டு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்திய நரம்பியல் கழகத்தின் மருத்துவக் கல்வி போர்டு இதுபோன்ற பயிற்சிகளை இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மேற்கு தமிழகத்தில் நரம்பியல் அறுவை சிகிச்சையில் முன்னணி மையமாக விளங்கிவரும் கேஎம்சிஹெச்-ல் இந்த பயிற்சி நடைபெற்றது. இந்தியா முழுவதிலும் இருந்து 60-க்கும் மேற்பட்ட இளம் மருத்துவர்கள் இதில் பங்கேற்றனர்.

முதுகுத்தண்டு டிஸ்க் விலகுதல், தண்டுவட எலும்புமுறிவு, முதுகெலும்பு கட்டி ஆகியவை பொதுவாகக் காணப்படும் முதுகுத்தண்டுவட பிரச்சினைகளாகும். இவற்றை சரிசெய்வதற்கு பயிற்சி பெற்ற திறமையான நிபுணர்கள் தேவை. நுண்ணறுவை சிகிச்சை, எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை, நுண்துளை அறுவை சிகிச்சை ஆகியவற்றில் இளம் வயதிலேயே பயிற்சி அளிப்பது என்பது அவர்களை எதிர்காலத்தில் அத்துறையில் சிறந்து விளங்கச் செய்யும். இந்த நோக்கத்துடன் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

கேஎம்சிஹெச் மருத்துவமனையில் வருடா வருடம் 300-க்கும் அதிகமான முதுகுத்தண்டுவட அறுவை சிகிச்சைகள் செய்யப்படுவதாகவும் அவை நோயாளிகளுக்கு சிறந்த பலனை அளித்துள்ளன என்றும் கேஎம்சிஹெச் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜே.கே.பி.சி. பார்த்திபன் தெரிவித்தார். டாக்டர் பார்த்திபன், டாக்டர் கோமல் பிரசாத் (பெங்களூரு), டாக்டர் கிருஷ்ணகுமார் (திருவனந்தபுரம்), டாக்டர் விவேக் ஜோசப் (வேலூர்), டாக்டர் வினு வி. கோபால் (கோட்டயம்)  மற்றும் டாக்டர் ஜெயேஷ் சர்தரா (மும்பை) ஆகிய மருத்துவர்கள் இணைந்து பயிற்சிகளை அளித்தனர்.

பயிற்சி வகுப்பைத் துவக்கி வைத்த கேஎம்சிஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி தனது உரையில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இளம் வயதிலேயே முறையான பயிற்சி பெறுவது மிகவும் முக்கியமானது என்றும் கேஎம்சிஹெச் மருத்துவமனையும் கேஎம்சிஹெச் மருத்துவக் கல்லூரியும் இதுபோன்ற பயிற்சிகளுக்கு எப்போதும் முன்னுரிமை அளித்துவருகிறது என்றும் குறிப்பிட்டார். இந்த பயிற்சி வகுப்பு நடத்துவதற்கு ஒத்துழைப்பு நல்கிய இந்திய நரம்பியல் கழகத்திற்கு அவர் நன்றிகளைத் தெரிவித்துகொண்டார்.

நரம்பியல் அறுவை சிகிச்சை கூடங்களின் உட்கட்டமைப்பிற்கு வலுசேர்க்கும் 4K 3D மைக்ரோஸ்கோபி, எண்டோஸ்கோபி, நேவிகேஷன் சிஸ்டம், 3D C-Arm முதலான அதிநவீன மருத்துவக் கருவிகளின் பயன்பாடு மற்றும் அவற்றின் முக்கியத்துவக் குறித்து கேஎம்சிஹெச் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி விளக்கினார். கேஎம்சிஹெச் நரம்பியல் அறுவை சிகிச்சை துறையானது உலகத்தரத்துடன் சேவையாற்றி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய நரம்பியல் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் வினு வி. கோபால் கல்வி போர்டு எடுத்துவரும் கல்வி தொடர்பான செயல்பாடுகளை விளக்கினர். இப்படிப்பட்ட முக்கியமான நிகழ்வை தமிழகத்தில் நடத்த முன்வந்த கேஎம்சிஹெச் மருத்துவமனைக்கு அவர் நன்றி தெரிவித்தார்.