ஆ.வெ.மாணிக்கவாசகம்
18 – வது பாராளுமன்ற பொதுத் தேர்தல் குறித்த அறிவிப்பினை மார்ச் இரண்டாவது வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.
அதற்கு தகுந்தாற் போல் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் அனைத்து மாநிலங்களிலும் அரசுத்துறை உயர் அலுவலர்கள், அனைத்து அரசியல் கட்சிகள் ஆகியவற்றுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறது.
ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி 2014-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 380 இடங்களில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியுடன் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்தது.
தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் 302 இடங்களைப் பிடித்து பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கட்டிலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
நடைபெற உள்ள பொதுத் தேர்தலிலும் 400-க்கும் அதிகமான இடங்களை பிடித்து மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி அரியணை ஏற முனைப்புடன் செயலாற்றி வருகிறது பா.ஜ.க.
தேர்தல் காலங்களில் மட்டும் தேர்தல் பணியாற்ற மாட்டோம் ; தேர்தல் பணி என்பது ஒரு அரசியல் கட்சிக்கு அன்றாட பணி ஆகும். இந்த வகையில் தேர்தல் வேலை என்பது பாரதிய ஜனதா கட்சிக்கு இயல்பானது என அக்கட்சியினர் உற்சாகத்துடன் தெரிவித்து எதிர் வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான தொடர் பணிகளை நிறைவேற்றி வருகின்றனர்.
அக்கட்சியின் முக்கிய கொள்கை முழக்கமான அயோத்தியில் ராமர் கோவில் எழுப்புவது என்ற தாரக மந்திரத்தை நிறைவேற்றும் பொருட்டு, அயோத்தி
மாநகரில் குழந்தை ராமருக்கு பட்டாபிஷேகம் பிரம்மாண்டமான முறையில் வெகு சீரும் சிறப்புடன் செய்யப்பட்டுள்ளது . இந்த உணர்வுடனும், உற்சாகத்துடனும் நாடு முழுவதும் தேர்தல் பணிகளுக்கு தயாராக உள்ளனர். மாதம் 16, 17 தேதிகளில் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
விலகிய கட்சிகள்
பாரதிய ஜனதா கட்சியின் வெற்றியினை இத்தேர்தலில் தடுக்க வேண்டும் என்ற நோக்கில் எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய “இண்டியா” கூட்டணியில் பல கட்சிகள் பிரித்து சென்று விட்டன.தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, தமது கட்சி பாராளுமன்றத் தேர்தலில் தனித்தே போட்டியிடும் என அறிவித்து உள்ளார்.
இந்தியா கூட்டணி உருவாகிய போதே அது காணாமல் போய் ,நொறுங்கி விடும் என அனைவருக்கும் தெரியும். பாராளுமன்றத் தேர்தல் நெருங்க, நெருங்க அக்கூட்டணி முழுமையாக இல்லாமல் போய்விடும் என பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் கூறியது உண்மையாகியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியில், வலுவான பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இருக்கும் நிலையில், இண்டியா கூட்டணியில் பல மாநிலங்களில், காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலில் குறைவான இடங்களை மட்டுமே அளிப்போம் என அறிவித்துள்ளதும் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி 2019-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 52 இடங்களில் வெற்றி பெற்றதை விட, குறைவான இடங்களே கிடைக்கும் என அகில இந்திய அளவில் உள்ள அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மாநில கட்சிகள் பகிர்ந்து அளிக்கும் குறைவான இடங்களின் எண்ணிக்கையே இது போன்ற கருத்துக்களுக்கு அடிப்படையாக உள்ளது.
அமைப்பு ரீதியாக இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பரவி, வெற்றி மேல் வெற்றி பெற்ற நூற்றாண்டு கால பாரம்பரிய மிக்க காங்கிரஸ் கட்சியின் அசுரத்தனமான வளர்ச்சியை முன்னெடுக்க கட்சியில் உள்ள அனைவரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
திமுக கூட்டணி
தேர்தல் பரப்புரை கூட்டங்களை
39 பாராளுமன்ற தொகுதிகளிலும் நடத்தியுள்ள திமுக தமது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு
4 இடமும் ,விடுதலை சிறுத்தைகளுக்கு 2 இடமும்,மதிமுக கொங்கு நாடு முன்னேற்ற தேசிய கட்சி,முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 என ஒதுக்கியது போலவே வரும் தேர்தலிலும் கூட்டணி கட்சிகளுக்கு திமுக தரவில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவாலய வட்டாரங்களில் கூறப்படுகிறது.
கூட்டணியில் இருந்து இந்திய ஜனநாயக கட்சி பிரிந்து சென்று விட்டது.
அந்த இடத்தை நிரப்ப நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு சீட் ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது.
காங்கிரசுக்கு கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையில் குறைக்கப்படும் என கூறப்படுகிறது அதாவது
8 தொகுதிகள் மட்டுமே அக்கட்சிக்கு ஒதுக்கப்பட உள்ளது.20-25 இடங்களில் திமுக நேரடியாக களம் காண உள்ளது.
அதிமுக
அதிமுக கூட்டணியை பொருத்தமட்டில், பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சிகள் தொடர்கின்றன .
டாக்டர் ராமதாஸ், அதிமுக கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் டாக்டர் அன்புமணி பாரதிய ஜனதா கட்சியுடன் சேர்வதை விருப்புகிறார்.
அதிமுக – பாமக பேச்சு வார்த்தையில், தொகுதி எண்ணிக்கையில் தான் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
தேமுதிக
தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் பேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா,
சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுகவுடன் கூட்டணி சேரவே, மாவட்ட செயலாளர்களின் விருப்பமாக உள்ளது என தெரிவித்தார்.
அதற்குப் பின் நான்கு நாட்கள் கழித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா,
14 தொகுதி, ஒரு ராஜ்ய சபா சீட் கொடுக்கும் கட்சியினருடன் கூட்டணி வைக்க விரும்புவதாக கூறியுள்ளார். பிரேமலதாவின் இந்த நிர்பந்த பேச்சை, அதிமுக தலைமை ரசிக்கவில்லை.
பாஜகவிலும் தேமுதிகவின் போக்கை விரும்பவில்லை.
தேமுதிகவின் வாக்கு வங்கி கணிசமாக குறைந்து விட்ட நிலையில், அதிமுக, பாஜக ஆகிய கூட்டணிகள் 4 தொகுதிகள் மட்டுமே அக்கட்சிக்கு ஒதுக்க முடியும் என தெரிவித்துள்ளன.
இதனை பெற்றுக் கொண்டு ஏதாவது ஒரு கூட்டணியில் தேமுதிக செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இது போன்ற தொகுதி எண்ணிக்கையினை இறுதி செய்வதில் அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி ஆகியவற்றில் தற்போது வரை இழு பறி நிலை நீடித்து வருகிறது.
மார்ச் 13ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவதால், தொகுதி ஒதுக்கீடு பேச்சு வார்த்தைகள் இம்மாத இறுதி வரை நீடிக்கலாம் என அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. .
Leave a Reply