கும்பமேளாவில் 30 பேர் பலியான திரிவேணி சங்கமத்தில் இருப்பது என்ன?

Spread the love

கும்பமேளா நிகழ்வில் மிக முக்கியமானது (தை )அம்மாவாசை தினத்தில் கங்கை, யமுனை , சரஸ்வதி இணையும் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் நீராடுவதாகும். அம்மாவாசை நாள் ஜனவரி 28 ஆம் தேதி மாலை 7:32 மணிக்குத் தொடங்கி ஜனவரி 29 ஆம் தேதி மாலை 6:05 மணிக்கு முடிவடைந்தது. இந்த தருணத்தில் பிரம்ம முகூர்த்தத்தில் அதாவது அதிகாலைக்கு முந்தைய நேரத்தில் நீராட பக்தர்கள் கோடிக்கணக்கில் திரிவேணி சங்கமத்தில் கூடினர்.

அதாவது, இந்த இடத்தில்தான் யமுனை நதியின் லைட் ப்ளு வண்ணத்திலான தண்ணீர் லைட்டாக மண் வண்ணத்திலான கங்கை நதி நீருடன் இணையும். அப்போது, இரண்டும் சேர்ந்து புது வண்ணத்திலான நீராக மாறி ஓடும். இதுதான், பூமிக்கு அடியில் ஓடுவதாக நம்பப்படும் சரஸ்வதி நதியின் தண்ணீர் என்பது நம்பிக்கை. இதனால், சங்கம் நோஸ் என்று அழைக்கப்படும் இந்த பகுதியில் நீராடவே அனைத்து பக்தர்களும் விரும்புவார்கள்.

இந்த சமயத்தில் இங்கு நீராடினால் பாவங்கள் நீங்கி மோட்சம் அல்லது முக்தி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால்,கடந்த 28 ஆம் தேதி இரவு
திரிவேணி சங்கமத்தை நோக்கி மக்கள் கூட்டம் அலை மோதியது. அங்கு , கூட்ட நெரிசலை தடுக்க வைக்கப்பட்ட பேரிகார்டுகளை தாண்டி மக்கள் சென்ற போது, கூட்ட நெரிசல் ஏற்பட தொடங்கியது. இதனால், நதியோரத்தில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 30 பேர் பலியாகியதோடு, ஏராளமானோர் காயமும் அடைந்துள்ளனர்.