கிறிஸ்தவ போதகர் ஜான் ஜெபராஜ் பாலியல் புகார் வழக்கில் கைது – மூணாறில் பதுங்கியிருந்த இடத்தில் பிடிப்பு

john jebaraj
Spread the love

தென்காசி மாவட்டம் சாம்பார் வடகரை பகுதியைச் சேர்ந்த ஜான் ஜெபராஜ் (வயது 35) தற்போது கோவை ஜி. என். மில்ஸில் வசித்து வருகிறார். மத போதகராகவும், கிறிஸ்தவ பாடல்களைப் பாடி பிரசங்கம் செய்யும் திறமையால் பிரபலமடைந்தவரும் ஆவார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு மே 21ஆம் தேதி ஜான் ஜெபராஜின் வீட்டில் நடந்த ஒரு கிறிஸ்தவ நிகழ்ச்சியில் பங்கேற்ற இரண்டு சிறுமிகளை அவர் பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகாரை சிறுமிகள் நேரடியாக கோவை காந்திபுரம் மத்திய மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்தன.

புகாரினைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு, ஜான் ஜெபராஜ் மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டமான “போஸ்கோ” பிரிவில் வழக்குப் பதிவு செய்தனர்.

வழக்கு பதியப்பட்ட பின்னர் ஜான் ஜெபராஜ் தலைமறைவாகி விட்டார். அவரை தேடி பிடிக்க மாநகர காவல் ஆணையர் சரவணா சுந்தர் மூன்று தனிப்படைகள் அமைத்து தேடுதல் உத்தரவு பிறப்பித்தார். போலீசார் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

அதற்கு மேலாக, அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லக்கூடாது என்பதற்காக, விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸும் அனுப்பப்பட்டது. இதற்கிடையே ஜான் ஜெபராஜ், முன் ஜாமீன் பெற சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், போலீசார் கடந்த சனிக்கிழமை ஜான் ஜெபராஜை மூணாறில் பதுங்கியிருந்த இடத்தில் கைது செய்தனர். பின்னர் அவரை கோவை காந்திபுரம் மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக இருந்ததால், அவர் கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள நீதிபதியின் இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து, அவரை கோவை மத்திய சிறையில் அடைக்கும் நடவடிக்கைகள் காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.