கவுண்டம்பாளைய​த்தில் மூடப்பட்ட மயானம் : சமூக விரோத செயல்களால் அச்சத்தில் பொதுமக்கள்

cemetry
Spread the love

கோவை கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில், கோவை மாநகராட்சி நேரடி மேற்பார்வையில், முஸ்லிம் சமூகத்திற்கான மயானம் கட்டப்பட்டு, பல வருடங்களாக பயன்பாட்டில் இருந்தது.

இந்த மயானம் தற்போது இரு தரப்பினருக்கிடையிலான உரிமை கோரல் பிரச்சனை காரணமாக மூடப்பட்டு பயன்படுத்தப்படாமல் உள்ளது. இந்த மயானத்தைச் சுற்றி ஹவுசிங் யூனிட்கள், தனி வீடுகள் மற்றும் பல அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளதால், அப்பகுதி மக்கள் எப்போதும் நெருக்கமாக வாழ்ந்து வருகின்றனர்.

மயானத்தின் வாயில் பூட்டப்பட்ட நிலையில், சிலர் மதில் சுவரை ஏறி உள்ளே நுழைந்து, இரவு நேரங்களில் பல்வேறு சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். நண்பர்களுடன் கூடி மதுபானம் அருந்துவது, போதைப் பொருட்கள் புகைபிடிப்பது போன்ற செயல்கள் அன்றாடம் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

​இந்த நடவடிக்கைகள், அருகில் வசிக்கும் பொதுமக்கள் மீது பயத்தை ஏற்படுத்தியுள்ளது. குற்றச்செயலில் ஈடுபடுவோர், அடுத்த கட்டமாக அருகிலுள்ள வீடுகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. மேலும், மெயின் சாலையிலிருந்து அந்த மயானம் உள்ள பகுதி உள்வாங்கியதாக அமைந்துள்ளதால், குற்றவாளிகள் தப்பிக்க வசதியான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, அப்பகுதி மக்கள், மயானம் மட்டுமன்றி, சமூக விரோத செயல்கள் நடைபெறும் அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், தாமதிக்காமல் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, குற்றங்களை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.