, ,

கரும்பை தலையில் சுமந்து 17 கி.மீ சைக்கிளில் சென்று பொங்கல் சீர் வைத்த முதியவர்

பொங்கல் சீர்
Spread the love

புதுக்கோட்டையில் 81 வயது முதியவர் ஒருவர் சைக்கிள் ஓட்டியவாறு தலையில் கரும்பு கட்டை வைத்துக் கொண்டு 17 கிலோமீட்டர் தூரம் சென்று தனது மகளுக்கு பொங்கல் சீர்வரிசை கொடுத்துள்ளார்.

பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுப்பவர்கள் மாப்பிள்ளை வீட்டிற்கு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது அவரவர் வசதிக்கேற்ப பொங்கல் சீர் வழங்குவது வாடிக்கை.  புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே உள்ள வடக்கு கொத்தகோட்டை கிராமத்தில் வசித்து வருபவர் 81 வயது  செல்லத்துரை .  இவரது மனைவி அமிர்தவள்ளி. இவர்களுக்கு சுந்தராம்பாள் என்ற மகளும், முருகேசன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், சுந்தராம்பாளை சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு நம்பம்பட்டியில் திருமணம் செய்து கொடுத்தனர். இந்நிலையில் அவருக்கு 12 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்தது. பின்னர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தராம்பாளுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில், அன்றைய தினம் முதல் இன்றைய தினம் வரை தொடர்ச்சியாக 11 ஆண்டு காலமாக மகள் மீது கொண்ட பாசத்தால் ஒவ்வொரு பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் சீர் வழங்கி வருகிறார். அதே போல் இப்போதும் தனது 81 வயதில் அவரது சைக்கிளில் தேங்காய் பழம், மஞ்சள் கொத்து, வேட்டி துண்டு, பொங்கல் பூ, பச்சரிசி, வெல்லம் என  பொங்கல் சீருடன், ஐந்து கரும்புகளை தலையில் வைத்துக் கொண்டு, கரும்பை கையில் வைத்து பிடிக்காமல் அவரது சைக்கிளை ஓட்டி செல்கிறார்.

வம்பன் நான்கு ரோடு பகுதியிலிருந்து சுமார் 17 கிலோ மீட்டர் தூரம் நம்பம்பட்டி வரை சைக்கிளிலேயே அவர் பொங்கல் சீர் கொண்டு செல்வதை சாலை நெடுகிலும் உள்ள மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். அவருக்கு  கைகளை காட்டி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். காலங்கள் கடந்தும் தமிழரின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் யாராலும் மாற்ற முடியாது என்பதை எங்கோ யாரோ ஒருவர் செய்து கொண்டு இருக்கின்றனர்.  கொத்தகோட்டை வர்த்தகர்கள் சார்பில் மகளுக்கு சீர் எடுத்துச் செல்லும் செல்லத்துரைக்கு விளம்பர பதாகை வைத்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.