​ஓட்டுக்காக இல்லை, மக்கள் நலனுக்காக​ – தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பூத் கமிட்டி கருத்தரங்கில் விஜய் உரை

விஜய்
Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பூத் கமிட்டி கருத்தரங்கு சனிக்கிழமை கோவை குரும்பபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உற்சாகமாக உரையாற்றினார்.

உரையில் விஜய் கூறுகையில், “கோவையோ, கொங்கு பகுதியோ நினைத்தாலே, மண்ணோடும் மக்களோடும் இருக்கும் மரியாதை நினைவுக்கு வருகிறது. என் நெஞ்சில் குடியிருக்கும் கோவை மக்களுக்கும், தோழர்களுக்கும் என் வணக்கம்,” என்றார்.

“பூத் கமிட்டி பயிற்சி பட்டறை என்றாலும், இது விழா போல் நடைபெறுகிறது. இந்த நிகழ்வு ஓட்டுக்காக மட்டும் நடத்தப்படுவதில்லை. ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்காக என்ன செய்யப்போகிறோம் என்பதே நமது முக்கிய நோக்கம். பழைய போல் பொய் சொல்லி ஆட்சியைப் பிடிக்கும் காலம் முடிந்தது. இனி மக்கள் நம்பிக்கையை பெறுவதே முக்கியம்,” என்று அவர் வலியுறுத்தினார்.

பூத் ஏஜென்ட்கள் கட்சி வெற்றிக்கான போர்வீரர்களாக இருப்பார்கள் என்றும், அவர்கள் மக்களிடம் நேர்மையும் உண்மையும் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் விஜய் அறிவுறுத்தினார். “நமக்கு கரையாத அரசியல் லட்சியம் இருக்கிறது, மனசில் நேர்மை, செயல்பட திறமை, பேச உண்மை இருக்கிறது. களம் தயார். இனி வெற்றிக்காக செயல்படுங்கள்,” என உற்சாகம் ஊட்டினார்.

விழாவின் இறுதியில் விஜய், எதிர்கால அரசியல் பயணத்தில் மக்களுடன் ஒன்றிணைந்து உண்மையுடன் செயல்படுவோம் என்பதில் உறுதியை வெளிப்படுத்தினார்.