ஆ.வெ.மாணிக்கவாசகம்
“அவரைப் பார்க்க வந்தால், முதலில் சாப்பிட சொல்லி விட்டுத் தான்;, அவர் எதற்காக வந்தார்? என விசாரித்து விட்டு அவருக்குத் தேவையான உதவிகள் செய்து அனுப்புவார் . தன்னை நாடி வருபவர்கள் யாரும் பசியுடன் இருக்கக் கூடாது :பசியுடன் போகக்கூடாது “ – திரைத் துறையிலும் அரசியலிலும் விஜயகாந்த் உடன் நெருங்கி பழகியவர்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தை இது .
கடவுளுக்கு எப்படி நெய்வேதியம் வைப்போமோ? அதேபோலத்தான் வருபவர்களுக்கு உணவளிக்க வேண்டும் என்ற நெறிமுறையை என்றும் கடைபிடித்தவர் விஜயகாந்த்.
மனிதனுக்கு அதிகபட்ச தேவை வயிற்றுக்கு உணவு. அதைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் என்றுமே இயல்பாகவே இருந்தது என அனைவருமே கூறுகின்றனர்.
வெளியூர் படப்பிடிப்புகளின் போது, இரவு நேரங்களில் அவரவர் அறைகளுக்கே சென்று சாப்பிட்டீர்களா? என அதிக அக்கறையுடன் விசாரிப்பாராம்
சினிமா முயற்சிகள்
1952-ல் மதுரை அழகர்சாமி – ஆண்டாள் தம்பதியருக்கு பிறந்தவர் நாராயணன் விஜயராஜ் அழகர்சாமி.
சிறு வயது முதலே நடிப்பின் மீது காதல் கொண்டு, தனது உடலை அதற்கு ஏற்ப கட்டுக்குள் வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தினார்.
1970-களில் நடிகராக வேண்டும் என்கின்ற அதிக ஆவலில், சென்னை வந்து அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டார்.
எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் கடுமையான போராட்டத்திற்கு பின்பே, “விஜயகாந்த்” என்ற பெயரில் திரை உலகில் அறிமுகமானார்.
1979-ம் ஆண்டு “அகல் விளக்கு” என்ற திரைப்படத்தில் வில்லனாக தோன்றினார்.
அந்த அகல் விளக்கு, திரைப்படத் துறையில் பின்னாளில் ஜோதியாய் சுடர் விட்டு நட்சத்திரமாக ஒளி வீசியது.
தொடர்ந்து 1981 ஆம் ஆண்டு “சட்டம் ஒரு இருட்டறை “ என்ற திரைப்படத்தில் நடித்த விஜயகாந்த், இப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் தனக்கென, தனி ஒரு அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது.
விஜயகாந்த் கண்கள்
இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் இப்படத்தை இயக்கினார்.
இந்தப் படத்தை இயக்கியது குறித்தும் விஜயகாந்த் பற்றியும் பல இடங்களில் கூறி இருக்கிறார்.
“விஜயின் கண்கள் தான் என்னைக்கவர்ந்தது.அந்த தேஜஸ் மிகுந்த கண்கள் என்னுள் ஒரு மிரற்சியை ஏற்படுத்தியது. அதில் மிகப்பெரும் ஒளி வட்டம் தெரிந்தது
அதற்காகவே,விஜயகாந்தை கதாநாயகன் ஆக்கினேன் .
அவரது கண்களை நினைத்தால் இன்னும் பிரமிப்பாகவே உள்ளது “ என குறிப்பிட்டுள்ளார் .
மேலும்,”விஜயகாந்த் படங்களில் மட்டுமல்ல, நிஜத்திலும் எதற்கு அஞ்சாதவர். ஒருமுறை படப்பிடிப்பு முடித்து நள்ளிரவு சென்னை தியாகராயர் நகரில் உள்ள வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது ,யாரோ ரெண்டு பேர் சாலையில் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.
அவர்களில் ஒருவர் மற்றவரை கத்தியால் கொலை செய்யும் நோக்கோடு பாய்ந்து உள்ளார். இதனைக் கண்ட விஜயகாந்த், காரை நிறுத்தி கீழே இறங்கி கத்தியுடன் அச்சுறுத்திய நபரை விரட்டிப் பிடித்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து விட்டு வீட்டுக்கு சென்றார் “
என அப்போதே விஜயகாந்தின் துணிவு குறித்து நினைவுகூர்ந்து உள்ளார் எஸ். ஏ. சந்திரசேகர்.
ஊமை விழிகள்
சென்னை திரைப்படக் கல்லூரி மாணவர்களே, கதை, திரைக்கதை, வசனம் எழுதிய படம் “ஊமை விழிகள்”. அதில் விஜயகாந்த் கதாநாயகன். மரபுகளை மீறி அதாவது, திரை உலகில் உதவி இயக்குனராக இருந்த பின்பே இயக்குனராவது.அதை உடைத்து ஊமை விழிகளில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.
திரைப்பட கல்லூரி மாணவர்களு டன் நடிப்பதற்கு பலர் தயங்கிய போது, விஜயகாந்த் துணிச்சலான இந்த முடிவு எடுத்தது அனைவராலும் பாராட்டப்பட்டது. யாரும் செய்யத் துணியாத காரியத்தை செய்யக்கூடிய முடிவே, அவரை ஒவ்வொரு கட்டத்திலும் முன்னோக்கி அழைத்துச் சென்றது. எஸ் .ஏ. சந்திரசேகர் தனது மகன் விஜய் திரைத்துறைக்கு அறிமுகம் செய்ய எண்ணிய போது, விஜயகாந்தை போனில் அழைத்து,பார்க்க வீட்டுக்கு வருகிறேன் என கூறியுள்ளார்.
வாருங்கள் என கூறிய விஜயகாந்த், உடனடியாக காரை எடுத்துக்கொண்டு சந்திரசேகரின் வீட்டிற்கு பத்து மணி நிமிடத்திற்குள் சென்று விட்டாராம்.
ஆச்சரியப்பட்ட சந்திரசேகர், தயங்கியவாறு தனது மகனை நடிக்க வைத்து, பட்டிதொட்டிகளில் எல்லாம் பேசப்பட வைக்க வேண்டும் என்று கேட்டபோது உடனடியாக ஒப்புக்கொண்டு, எத்தனை நாட்கள் என உடனே தேதியை கொடுத்தாராம்.
அதற்கு பணம் எதுவும் பெற்றுக் கொள்ளாமல், உயர்ந்த எண்ணத்தோடு விஜயை நடிக்க வைத்து பிரபலப்படுத்தினார் .அந்தப் படமே செந்தூரப்பாண்டி.
பட்ஜெட் படங்கள்
தொடர் வெற்றிகளால் விஜயகாந்த் சிறிய பட்ஜெட் நடிகராக வளர்ந்தார்.
அதேபோல தயாரிப்பாளருக்கு எவ்விதமான ஆடம்பர செலவையும் வைக்காதவர். தயாரிப்பாளர் பணம் போடுகிறார் நாம் நடித்துக் கொடுக் கிறோம். தாம் ஒரு தொழிலாளி என்பதை என்றுமே மனதில் நிறுத்தி திரைப்படங்களில் நடித்தவர். நிஜ வாழ்வில் வாழ்ந்தவர். கேரவன் வேனை பயன்படுத்தாத ஒரே நடிகர் என்றால் அது விஜயகாந்த் மட்டும்தான்.
கடனை தீர்த்தவர்
தமிழ் திரை உலகில் திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு முகவரி கொடுத்தவர். அவர்கள் திரையுலகில் அழுத்தமாக கால் பதிக்க தோள் கொடுத்தவர். நடிகர் சங்க தலைவராக இருந்து, திரை உலகில் நிலவி வந்த பல்வேறு, பிரச்சனைகளை குறிப்பாக நடிகர் சம்பளம், தயாரிப்பாளர்களுக்கு பெரிதும் நெருக்கடி ஏற்படுத்திய காலகட்டத்தில் அவைகளை எளிதில் கையாண்டார்.
நடிகர் சங்கம் கடனில் விழி பிதுங்கிய போது, நட்சத்திர கலை விழாக்கள் மூலம் திரட்டிய,.
நாலரை கோடி ரூபாய் மூலம், நடிகர் சங்கத்தை கடனிலிருந்து எளிதாக மீட்டெடுத்தார்.
யாரையும் கெடுத்ததில்லை; வாரி வாரி கொடுப்பதிலேயே அவரது கவனம் இருந்தது. கல்வி உதவித் தொகைக்காக பிரதி மாதம் 27-ஆம் தேதி முதல் 30 வரை நூற்றுக்கணக்கான காசோலைகளில் கையெழுத்திடுபவர். தினம்தோறும் யாருக்காவது, ஏதாவது வகைகளில் உதவி செய்து விட்டுத் தான் தூங்கும் இயல்பினை கொண்டவர்.
50 இயக்குனர்கள்
மூத்த நடிகர் என்ற தன்மை இல்லாமல் அனைவரிடத்திலும், மிக எளிதாக பழகுபவர். யார் மனதையும் புண்படுத்தாதவர். 50-க்கும் மேற்பட்ட திரைப்பட இயக்குனர்களைஉருவாக்கியவர்.
ஈழத் தமிழர்கள் மீது அதிக அக்கறை கொண்டு பல போராட்டங்களை முன் நின்று நடத்தியவர். விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் மீது அதிக பாசம், பற்று கொண்டதால் தான் தனது, மூத்த மகனுக்கு பிரபாகரன் என பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
ஈழம் மலர வேண்டும் என்பதில் அதிக ஆசைப்பட்டவர்.
அதனாலேயே உலகம் முழுவதும் உள்ள இலங்கை தமிழர்கள் விஜயகாந்த் மீது தனிப்பட்ட முறையில் அன்பும் பாசமும் வைத்திருந்தனர்.
தேமுதிக
தமிழக அரசியல் வரலாற்றில் திரை துறையினர் வருவது ஒன்றும் புதிதல்ல. புரட்சித்தலைவர் எம்ஜிஆரிலிருந்து நீண்ட பட்டியல் தொடர்கிறது.
ஆனால் எம்ஜிஆர்க்கு பிறகு குறிப்பிடத்தக்க அளவில் அரசியலில் சாதித்த காட்டியவர் என்றால் அது விஜயகாந்த் தான்.
1990-களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்த்து, பூதாகரமாக உருவெடுத்து வந்த நிலையில் அவரது தயக்கம் அதற்கு அணை போட்டது.ஆனால் எதற்கும் தயங்காத விஜயகாந்த் துணிச்சலாக அரசியலிலும் கால் பதித்தார்.
திரை உலக துணிச்சல் முடிவுகளைப் போலவே அரசியலிலும் துணிச்சலாக எடுத்த முடிவுகள் அவரை வேகமாக புகழ் ஏணியில் ஏற்றி வைத்தன. தமிழக அரசியல் வரலாற்றில் மதுரை மண்ணுக்கு ஒரு மிகப்பெரிய இடம் உண்டு. அந்த மதுரையில் 2006-ம் ஆண்டு தேசிய திராவிட முற்போக்கு கழகத்தை தொடங்கினார். அப்போது நடைபெற்ற தேர்தலில் தேமுதிக சார்பில் மதுரை மண்ணிலோ அல்லது வேலூரில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்த்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கு நிறைந்த இடத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதாவது எதிர்பார்க்காத விருதாசலம் தொகுதியில் களம் கண்டு தேமுதிகவின் ஒரே சட்டமன்ற உறுப்பினராக சட்டமன்றத்திற்குச் சென்று தமது, மக்கள் பணியினை தொடங்கினார்.
ஏறுமுகம்
2006-ம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்த விஜயகாந்திற்கு அரசியல் வாழ்க்கைத் தொடர்ந்து ஏறுமுகமாக அமைந்தது.
அரசியலில் மூத்த அனுபவம் வாய்ந்த பெரும் தலைவர்களை எல்லாம் தாண்டி கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்திற்கு வேகமாக உயர்ந்தார். 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவை மிஞ்சி,ஜெயலலிதா முதல்வர் பதவிக்கு வருவதற்கு பெரும் துணை
யாக இருந்து,தமிழக எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் உயர்ந்தார்.
2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக ஒரு தொகுதியைக் கூட வெல்லாத நிலையில் விஜயகாந்த் வகித்த கூட்டணி 2 இடங்களில் வென்றது.எதிர்க்கட்சி தலைவராக வலம் வந்த விஜயகாந்த் அடுத்த முதலமைச்சர் அவர்தான் என தமிழகம் முழுவதும் பேசப்பட்டது.
தோல்வி
ஆனால் 2016 -ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நல கூட்டணி அமைத்து படுதோல்வியை கண்டார். அவரின் இந்த துணிச்சலால் முடிவு, மீண்டு வர முடியாத சரிவில் போய் தள்ளியது. விஜயகாந்தும் தனது தொகுதியில் தோல்வியை தழுவினார். அவரது அரசியல் வாழ்க்கையில அப்போது தொடங்கிய சரிவிலிருந்து, அவர் மீண்டும் வரவே முடியவில்லை.
தொடர்ந்து அவர் உடல் நலமும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் அரசியலில் நின்று நிலைக்க முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டார். தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டாலும், அவரின் இயல்புநிலை முழுக்க மாறிவிட்டது.துணைவியாக கரம் பிடித்த பிரேமலதா, அவருக்கு
உற்ற துணையாக இருந்து கவனித்தார்.
Leave a Reply