கோவை நீலம்பூர் – மதுக்கரை இடையே இருவழிச்சாலை அமைக்க நெடுஞ்சாலை துறையுடன் இணைந்து எல்&டி நிறுவனம் 1998ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்து 2000ஆம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது.
எல்&டி பைபாஸ் சாலை என அழைக்கப்படும் இந்த புறவழிச்சாலையை 30 ஆண்டுகள் பராமரிக்க மற்றும் சுங்க வரி வசூலிக்க அரசு மற்றும் எல்&டி நிறுவனம் இடையே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இந்த பாதை கோவை மற்றும் கேரளா இடையிலான போக்குவரத்துக்குப் பெரிதும் பயனுள்ளதாக உள்ளது. சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு கேரளாவில் இருந்து செல்லும் வாகனங்கள் இந்த பைபாஸை அதிகம் பயன்படுத்தி வருகின்றன.
இந்த சாலையில் விபத்துகள் அதிகரித்து வருவதால், விரிவாக்கம் செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. ஆனால், எல்&டி நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2029ஆம் ஆண்டு முடியவுள்ளதால், விரிவாக்க பணிகள் உடனடியாக மேற்கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது.
இருப்பினும், வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், விபத்து சம்பவங்களும் தொடர்ந்து அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே, இந்த சாலையை இருபுறமும் சர்வீஸ் சாலைகளுடன் கூடிய நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
விரிவாக்க பணிகளுக்காக 45 மீட்டர் நிலத்தை அரசு முன்பே கையகப்படுத்தி உள்ளது. எனவே, விரைவில் பணிகளை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இந்த நிலையில், இந்தச் சாலையின் பராமரிப்பை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏற்றுக்கொண்டு விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த மாற்றம் ஜூன் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.
Leave a Reply