உலகளவில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் எயிட்ஸ் நோயை உருவாக்கும் எச்.ஐ.வி. வைரஸுக்கு, சிகிச்சை மருந்து இல்லாத நிலை நீடித்து வரும் சூழலில், தற்போது ஒரு தற்காலிக தடுப்பூசி வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசி, ‘லெனகாபாவிர்’ (Lenacapavir) என அழைக்கப்படுகிறது. இதற்கான சோதனைகள் வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) இதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த தடுப்பூசி, முன்கூட்டிய எச்சரிக்கையாக செயல்படுவதோடு, அதை செலுத்திக் கொண்ட நபர்களை ஆறு மாதங்கள் வரை எச்.ஐ.வி தொற்றிலிருந்து பாதுகாக்கும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது. எனினும், இது சிகிச்சைக்கான மருந்து அல்ல என்பதைக் குறிப்பிட வேண்டும். ஏற்கனவே எச்.ஐ.வி வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளவர்களுக்கு இந்த தடுப்பூசி பயனளிக்காது.
மூன்று கட்ட சோதனைகள் அடிப்படையில் இந்த தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதில், தடுப்பூசி செலுத்திய பெண்கள் 100% பாதுகாப்பைப் பெற்றனர். ஆண்களில், வெறும் 0.1% பேர் மட்டுமே வைரஸால் பாதிக்கப்பட்டனர். இது, தடுப்பூசியின் செயல்திறனை உறுதி செய்கிறது.
இந்த தடுப்பூசியின் பாதுகாப்பு வலயம் ஆறு மாதங்கள் மட்டுமே என்பதால், அதற்குப் பிறகு மீண்டும் அதே தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். மேலும், ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் எச்.ஐ.வி பரிசோதனை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த முக்கியமான மருத்துவ முன்னேற்றம் குறித்து வெளியான ஆராய்ச்சி விவரங்கள், ‘நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின்’ எனும் பன்னாட்டு மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
Leave a Reply