ஆ.வெ.மாணிக்கவாசகம்
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அதிமுக விலகிய பின்பு,கடந்த 21 ஆம் தேதி மாலை அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்,மாவட்ட செயலாளர்கள் பூத் கமிட்டி உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றது.
பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இல்லாத உற்சாகத்தில், இக்கூட்டத்தில் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றனர்.
அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் சம்பிரதாயப்படி பேசி, சிறுபான்மையினரின் வாக்குகளை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெறுவது பற்றி பேசினார் .
தொடர்ந்து பேசிய இரண்டாம் கட்ட தலைவர்கள்,வரும் பாராளுமன்ற தேர்தலில் புதிய வலிமையான கூட்டணியை ஏற்படுத்தி,
கணிசமான எண்ணிக்கையில் பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்தனர்.
மாற்றுக் கட்சியிலிருந்து,குறிப்பாக அமமுக பாஜக ஆகிய கட்சிகளில் உள்ள அதிருப்தியாளர்களை அதிமுகவில் இணைத்து,கட்சியின் கட்டமைப்பை அதிகரிக்க வேண்டுமென பேசினர்.
பாஜக எம்எல்ஏ மருமகன்
அதற்கு அட்சாரமிடும் வகையில் பாஜக ஓ பி சி அணியின் மாநில துணைத்தலைவரும்,மொடக்குறிச்சி பாஜக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.சரஸ்வதியின் மருமகனுமான அசோக்குமார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.
“ஆற்றல்” என்ற அறக்கட்டளை மூலம் பல்வேறு நலப்பணிகள்,மருத்துவ முகாம்கள் ஈரோடு மாவட்டத்தில் நடத்தி வருகிறார்.
ஈரோடு பகுதியில் நன்கு அறிமுகமான அசோக்குமார்,பாஜக தலைவர் அண்ணாமலையுடன் மிகுந்த நெருக்கத்தில் இருந்ததால், ஈரோடு எம்பி சீட் அவருக்குத்தான் என அசோக் குமார் ஆதரவாளர்கள் பேசி வந்தனர்.இந்நிலையில்
அசோக்குமாரின் ச செயல் பாடுகள்,சட்ட மன்ற உறுப்பினர் சரஸ்வதிக்கு அண்மைக்காலமாக பிடிக்காமல் போகவே, அசோக் குமாரை கண்டு கொள்ளாமல் இருந்தார்.இதனைப் பயன்படுத்திக் கொண்ட அதிமுக தலைமை,
அதிருப்தியில் இருந்த அசோக்குமாரை தன் பக்கம் இழுத்துக் கொண்டது.
அமமுக நிர்வாகி
தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு செல்வாக்கு இல்லை என பலரும் கருதி வரும் நிலையில், அமமுக தலைமை நிலைய செயலாளரும், மதுரை புறநகர் மாவட்ட செயலாளரும்,எக்ஸ் எம்எல்ஏவமான உசிலம்பட்டி ஐ. மகேந்திரன் அதிமுகவில் இணைந்துள்ளார்.
தென் மாவட்டங்களில் செல்வாக்கு உள்ள வரும், டிடிவி தினகரனுக்கு நெருக்கமாகவும் இருந்த மகேந்திரன்
அமமுக-விற்காக நிறைய செலவு செய்துள்ளார்.
ஆனால் அதனை தலைமை கண்டு கொள்ளாத அதிருப்தியில் இருந்தவரை முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அதிமுகவுக்கு வளைத்துள்ளார்.
உசிலம்பட்டி, சோழவந்தான் தொகுதிகளை இணைத்து கட்சி நிர்வாகத்திற்காக மாவட்டமாக்கி அவருக்கு மாவட்ட செயலாளர் பதவியோ, அல்லது வரும் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்ற உத்தரவாதத்துடன் அதிமுக-விற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இப்படி தமிழகம் தழுவிய அளவில் அதிருப்தியில் உள்ளவர்களைக்,கண்டறிந்து, அவர்களை அதிமுகவில் இணைப்பது பற்றிய யூக்திகளும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விரிவாக பேசப்பட்டதாம்.
மேலும் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.விஜயபாஸ்கர்,
பிவி ரமணா ஆகியோர் மீதான ஊழல் ஊழல் குற்றச்சாட்டுக்கு சிபிஐக்கு கவர்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது பற்றியும் பேசப்பட்டது.
கவர்னர் பி. வி. ரவி,உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனை இல்லாமல் அனுமதி கொடுத்திருக்க மாட்டார்.
பாஜக அதிமுகவுக்கு எதிரான மனநிலையில் உள்ளதை காட்டுகிறது.
கூட்டணியில் உள்ள போது, எவ்வித எதிர் நடவடிக்கை எடுக்காத போது, கூட்டணியில் இருந்து விலகிய பின் பாஜகவின் எதிரான மன நிலையை மக்களிடம் கொண்டு சென்று, அதனை அதிமுகவுக்கு சாதகமாக்கிக் கொள்ள வேண்டும் எனவும் பேசப்பட்டுள்ளது.
வரும் தேர்தலில்ஆளும் திமுகவுக்கு எதிராக மக்களின் மனநிலை உள்ளதாலும்,அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கி இருப்பதாலும்,
விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கம் வகையில், குண்டர் சட்டத்தின் மூலம் அவர்களை கைது செய்திருப்பதையும், மணல் கொள்ளை,சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்டவைகளை பொதுமக்களிடம் கொண்டு சென்று வாக்குகளை பெற வேண்டும் எனவும் பேசப்பட்டது.
இறுதியாக பேசிய,எடப்பாடி பழனிசாமி நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை இன்னும் வேகப்படுத்த வேண்டும், கட்சிக்கு பிரதானமாக உள்ள பூத் கமிட்டியினை அமைத்து வரும் டிசம்பர் மூன்றாம் தேதிக்குள் தலைமையிடம் ஒப்படைக்க வேண்டும், புரட்சித்தலைவி ஜெயலலிதா இருந்த பொழுது 15 பேர் மட்டுமே பூத் கமிட்டி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால் தற்போது 69 நபர்கள் வரை பூத் கமிட்டியில் சேர்க்க வேண்டும்.
அதனால் கால தாமதம் ஏற்படும் தான்.இருந்தாலும் அப்பணியினை வேகமாக செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
தைரியத்துடன் எதிர் கொள்வோம்
முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளுக்கு ஆளுநர் அனுமதி அளித்திருப்பதனை கண்டு,சோர்ந்து போகக் கூடாது நம் மீது அடுத்தடுத்து வழக்குகள் வரும் :இரண்டாம் கட்ட தலைவர்கள் கைது செய்யப்படும் நிலையும் ஏற்படலாம் ;என்னையே கைது செய்ய வாய்ப்பு இருக்கிறது ;
எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்,கழக வழக்கறிஞர்கள் இது போன்ற நெருக்கடிகள் வந்தால் தீவிரமாக செயல்பட்டு சட்ட ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
வரும் பாராளுமன்ற தேர்தலின் போது, வழக்குகளின் மூலம் தொந்தரவிற்கு ஆளாக்கி செயல்பட முடியாமல் முடக்க நினைக்கலாம்,
கோடநாடு வழக்கினை துரிதப்படுத்தி, நெருக்குதலை தரலாம்.
திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிமுக பாஜக மறைமுக உறவு நீடிக்கிறது என பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
மத்திய பிரதேசம், தெலுங்கானா, சட்டீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான் ஆகிய மாநில தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதாவிற்கு சாதகமாக வரும் பட்சத்தில், மீண்டும் கூட்டணியில் சேர பாஜக நெருக்கடி தருவர். எந்த சூழ்நிலையிலும் மாற்றி முடிவெடுக்க முடியாது என உற்சாகமூட்டும் வகையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசினார் .
அதிமுகவில்,பூத் கமிட்டியை வலுவுள்ளதாக்குவது,கட்சி நிர்வாகத்தில் சிறுபான்மையினரருக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பது, இளைஞர்கள் இளம்பெண் பாசறையில் அதிக உறுப்பினர்களை சேர்ப்பது என கட்சி கட்டமைப்பை பலமாக்கி கட்சியினை பீடுநடை போட வைப்பது ஒரு புறமும்,ஓபிஎஸ் அணி, அமமுக நிர்வாகிகளை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொள்வது என கட்சியினை ராணுவ கட்டுப்பாட்டோடு கொண்டு சென்று, புரட்சித் தலைவர் தொடங்கிய அதிமுக-வை நின்று நிலை பெற செய்ய எடப்பாடி பழனிசாமியின் முயற்சிகளுக்கு காலம் மட்டுமே காத்திருக்கிறது பதில் சொல்ல ….
Leave a Reply