பாமக இளைஞரணி தலைவர் நியமன விவகாரத்தில் தந்தை ராமதாஸ்- மகன் அன்புமணி இடையே பொதுக்குழு மேடையில் மோதல் வெடித்த நிலையில், திடீரென இருவரும் ராசியாகி உள்ளனர். தந்தை பக்கம் செல்வதா, மகன் பக்கம் நிற்பதா என தொண்டர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 28ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், பாமக தலைவர் அன்புமணி, கௌரவ தலைவர் ஜி.கே.மணி, வடிவேல் ராவணன் உள்ளிட்டவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
பொதுக்குழுவில் பேசிய ராமதாஸ், கட்சி பணிகளில் அன்புமணிக்கு உதவியாக இருக்க, மாநில இளைஞரணி தலைவராக முகுந்தன் பரசுராமனை நியமிக்கிறேன் என்று ஒரு குண்டை தூக்கிப் போட்டார். ஆனால், இதை அன்புமணி ஏற்கவில்லை.
தனது எதிர்ப்பை பொதுக்குழுவில் உடனேயே சட்டனெ தெரிவித்தார் அன்புமணி. முகுந்தன் பாமகவில் சேர்ந்தே வெறும் நான்கு மாதங்கள்தான் ஆகின்றன. அவருக்கு எப்படி இளைஞர் சங்கத் தலைவர் பதவி தரலாம்? என்ன அனுபவம் இருக்கும்? கட்சியில் இருக்கும் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு பதவி கொடுங்கள். ஏனென்றால்,
களத்தில் பணியாற்ற திறமையான ஆட்கள் வேண்டும் என்று ஆவேசமாக பேசினார் அன்புமணி.
அன்புமணியின் பேச்சால் கொதித்துப் போன ராமதாஸ், அன்புமணி பேசிக் கொண்டிருக்கும் போதே குறுக்கிட்டார். யாராக இருந்தாலும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். நான் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் யாரும் இந்தக் கட்சியில் இருக்க முடியாது. இது நான் உருவாக்கிய கட்சி என்று கடுமையாக பேசினார்.
திடீரென தந்தையும் மகனும் வார்த்தை போரால் மோதிக்கொண்டது, பொதுக்குழுவில் வந்த பாமகவினருக்கு கடும் அதிர்ச்சியை தந்தது. என்ன நடக்கிறது என்றே புரியாமல் குழம்பிப்போனார். இதனிடையே நிலைமை கைமீறி போவதை அறிந்த ஜி.கே. மணி, அன்புமணியையும் ராம்தாஸையும் சமாதானப்படுத்த முயன்றார்.
எனினும், மேடையிலேயே இன்னொரு அறிவிப்பை வெளியிட்டார் அன்புமணி. சென்னை பனையூரில் புதிதாக அலுவலகம் திறந்திருப்பதாகவும், தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் தன்னை அங்கு வந்து சந்திக்குமாறும் கூறிவிட்டு வெளியேறினார் அன்புமணி.
திடீரென இருவரும் மோதிக் கொண்டது, டிவி சேனல்களில் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்க மார்கழி குளிரும் தமிழக அரசியல் களம் சூடாகிப் போனது. இதனிடையே, பாமக முன்னணி நிர்வாகிகள் சிலர் தலையிட்டு, இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். மூத்த நிர்வாகிகளின் ஆலோசனைப்படி, டிசம்பர் 29-ம் தேதியே தைலாபுரம் தோட்டத்தில் தந்தை ராமதாஸைச் சந்தித்தார் அன்புமணி.
பின்னர் பேசிய அன்புமணி, பாமகவின் வளர்ச்சி, தேர்தல் திட்டங்கள் மற்றும் அடுத்தகட்ட போராட்டங்கள் குறித்து மருத்துவர் ஐயாவிடம் விவாதித்தோம். பொதுக்குழுவில் நடந்தது எங்கள் கட்சியின் உட்கட்சிப் பிரச்னை. பா.ம.க ஒரு ஜனநாயகக் கட்சி என்பதால், அதில் காரசாரமான விவாதங்கள் இருக்கும். அது குறித்து யாரும் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை” என்று ஒரே போடுபோட்டார்.
அடுத்த சில தினங்களில் ராமதாஸும் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், பா.ம.க பொதுக்குழுவில் நடைபெற்றது எங்கள் உள்கட்சி விவகாரம். பா.ம.க இளைஞரணி தலைவர் முகுந்தன்தான். அதை பொதுக்குழுவில் அறிவித்ததுடன், அதற்கான கடிதத்தையும் அவரிடம் வழங்கி விட்டேன். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. அன்புமணியுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அவரிடம் பேசி அது சரி செய்யப்பட்டு விட்டது என்று கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
தந்தை- மகன் இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் தற்போதைக்கு ஓய்ந்தது போல் தோன்றினாலும், மனதளவில் இருவருக்கு இடையே ஏற்பட்ட காயத்தின் வடு இன்னமும் ஆறாமல்தான் இருக்கும். கட்சி விவகாரம் பெரிதானால் மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு சரிந்துவிடும்; கட்சிக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டால் கூட்டணி, சீட் ஒதுக்கீடு போன்றவற்றில் சிக்கல் வரலாம் என்று கருதி, தந்தைக்கு இப்போது கட்டுப்பட்டு போவது என்று அன்புமணி முடிவெடுத்துள்ளாராம்.
எனவே, வரும் சட்டமன்றத் தேர்தல் வரை ராமதாஸுடன் எந்த பிரச்சினையையும் வராது என்று பாமகவினர் நம்புகின்றனர். எனினும், அரசியல் களத்தில் உத்வேகமாக செயல்பட்டு வந்த பாமகவுக்கு தந்தை – மகன் மோதல் என்பது ஒரு சறுக்கல் என்றால் அது மிகையல்ல.
Leave a Reply