ஊழியர்களுக்கு அள்ளி அள்ளி போனஸ் கொடுத்த கோவை. கோ

Spread the love

கோவை. கோ என்ற ஐடி நிறுவனம் கோயம்புத்தூரை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது . உடையாம்பாளையம் சாலை பகுதில் உள்ள இந்த நிறுவனம்  Software as a Service (SaaS) எனப்படும் மென்பொருளை சேவையாக வழங்கி வருகிறது. இந்நிறுவனம் பிபிசி, வோடஃபோன், ஃபைசர் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுக்கு மென்பொருள் சேவையை வழங்குகிறது. இந்த நிறுவனம் தங்களிடம் பணியாற்றும் 140 ஊழியர்களுக்கு மொத்தமாக 14. 5 கோடி ரூபாயை போனஸாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

டுகெதர் வீ கோ என்ற திட்டத்தின் கீழ் ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அல்லது அதற்கு முன்பு நிறுவனத்தில் சேர்ந்த அனைத்து ஊழியர்களும் மூன்று ஆண்டுகள் சேவை முடித்தவுடன் அவர்களின் மொத்த ஆண்டு ஊதியத்தில் சுமார் 50 சதவீத தொகையை போனஸாக பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக 80க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஜனவரி 31 ஆம் தேதி அன்று தங்கள் மாத ஊதியத்தோடு சேர்ந்து போனஸ் தொகையும் பெற்றுள்ளனர். நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் லாபத்திற்கும் பங்களிக்கும் ஊழியர்களுக்கு உரிய வெகுமதி அளிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக,  கோவை.கோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சரவணகுமார் தெரிவித்துள்ளார்.