,

உடல் பருமனால் அவதிப்பட்டு தற்கொலை முயற்சி – கோவையில் அதிர்ச்சி சம்பவம்

suicide attempt
Spread the love

சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த இப்ராகிம் பாட்சா (54) டிரைவராக பணியாற்றி வருகிறார். அவருக்கு சம்சத் பேகம் (50) என்ற தங்கை உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக, இருவரும் உடல் பருமனால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும், அவர்கள் உடல் எடை குறையவில்லை.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு, கோவைக்கு வந்த அவர்கள், ஆயுர்வேத சிகிச்சை பெற இருப்பதாக கூறி, ஒரு தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கினர். இருப்பினும், அவர்கள் அறையை விட்டு வெளியே வராததால், ஓட்டல் ஊழியர்களுக்கு சந்தேகம் எழுந்தது.

சனிக்கிழமை, இப்ராகிம் பாட்சா, ஏடிஎம்மில் பணம் எடுக்கச் செல்லுகிறேன் என்று கூறி, ஓட்டலில் இருந்து வெளியேறினார். ஆனால், அவர் வெகுநேரமாகியும் திரும்பி வராததால், ஓட்டல் ஊழியர்கள் அவர்களின் அறையை தேடி சென்றனர். அப்போது, அறை பூட்டப்பட்டிருந்ததை கவனித்த ஊழியர்கள், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, சம்சத் பேகம் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தார்.

உடனே இது பற்றிய தகவல் காட்டூர் காவல் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், நடந்ததை விசாரித்தபோது, சம்சத் பேகம் அதிகளவில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டதால் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும், அருகில் இருந்த கடிதத்தில், “நானும் அண்ணனும் உடல் பருமனால் அவதிப்பட்டு வந்தோம். வாழ்வதை விட, உயிரை மாய்த்துக்கொள்வதே எங்களுக்கு சிறந்தது. எங்கள் உடல்களை ஒன்றாக அடக்கம் செய்யுங்கள்” என்று எழுதியிருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.

அதன்பேரில், சம்சத் பேகத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், இப்ராகிம் பாட்சா தப்பிச் சென்றது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரது கார் எண் மற்றும் GPS விவரங்களை வைத்து தேடியபோது, அவர் கோவை ரயில் நிலையத்திற்கு அருகில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கு சென்று போலீசார் ஆய்வு செய்தபோது, காற்றிலே காருக்குள் இருந்த இப்ராகிம் பாட்சாவை கண்டனர். அவரை விசாரணை மேற்கொண்டபோது, “நானும் தூக்க மாத்திரைகள் எடுத்தேன், ஆனால் உயிரிழக்கவில்லை. அதனால், பிளேடு உடைத்து விழுங்கினேன். இதுவும் முடியாததால், ரயிலுக்கு முன்பாக பாய்ந்து தற்கொலை செய்ய நினைத்தேன்” என்று தெரிவித்தார்.

உடனடியாக, காவல்துறையினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். தற்போது, கோவை அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.