உக்கடத்தில் இரண்டு பேருந்து நிலையங்கள்

Spread the love
கோவை – கேரளத்தில் இருந்து வந்து செல்லும் மக்களின் வசதிக்காக உக்கடத்தில் 2 பேருந்து நிலையங்கள் அமைப்பதற்காக மாநகராட்சி சார்பில் ஒப்பந்தப்புள்ளி  கோரப்பட்டுள்ளது.

கோவைள்ள உக்கடம் பேருந்து நிலையம் தமிழகம், கேரளம் ஆகிய இரு மாநில மக்களின் போக்குவரத்து முக்கியப் பங்காற்றி வருகிறது. உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்றபோது தூண்கள் அமைப்பதற்காக பேருந்து நிலையத்தின் சுற்றுச்சுவர்கள் இடிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக சுங்கம் செல்வதற்காக வழித்தடம் அமைப்பதற்காக பேருந்து நிலைய வளாகத்திற்குள்ளேயே தூண்கள் அமைக்கப்பட்டன. கடந்த பத்தாண்டுகளாக உக்கடம் பேருந்து நிலையம் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. பணிகள் காரணமாக உக்கடம் பேருந்து நிலையம் பகுதி மிகவும் மோசமடைந்ததுடன் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால், பொதுமக்கள் பேருந்துக்காக நிற்பதற்கும், காத்திருக்கவும் கடும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.

உக்கடம் பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சார்பில் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இந்த பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், உக்கடம் பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். பங்குதாரர்களின் ஆலோசனைகள் கேட்கப்படும். பார்க்கிங் பகுதியை விரிவுபடுத்த நகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தின் நுழைவுப் பகுதி, வெளியேறும் பகுதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

முதல்வர் ஸ்டாலின் பேருந்து நிலையத்தை நவீன முறையில் அமைக்கும் வகையில்  20 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.  கோவை மாநகராட்சி சார்பில் உக்கடம் பேருந்து நிலையத்தில் மாநகராட்சி நிர்வாகம் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது. இதனையடுத்து உக்கடத்தில் 2 பேருந்து நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உக்கடம் பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 30 பேருந்துகல் நிறுத்தும் வகையில் ரேக்குகள் அமைக்கப்படவுள்ளன.
பேரூர் பைபாஸ் சாலையில் மற்றொரு பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது. அந்த நிலைய வளாகத்தில், ஒரே நேரத்தில் 28 பேருந்துகள் நிறுத்தும் வகையில் ரேக்குகள் அமைக்கப்படவுள்ளன. இரண்டு இடங்களில் வணிக வளாகம், கழிப்பறை, வாகன நிறுத்துமிடங்கள், பாதுகாப்பு அறை  அமைக்கப்படவுள்ளன.  உக்கடம் பேருந்து நிலையம், பேரூர் பைபாஸ் சாலையில் அமையவுள்ள இரண்டு பேருந்து நிலையங்களை இணைக்கும் வகையில் சப்வே அமைக்கவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்பணிகளை மேற்கொள்வதற்காக கோவை மாநகராட்சி சார்பில் ரூ. 21.55 கோடியில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. கோர விரும்புவோர் டிசம்பர் 17 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் இணையதளம் வழியாக கோரலாம். டிசம்பர் 18 ஆம் தேதி பிற்பகல் 4 மணிக்கு டெண்டர் திறக்கப்படவுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர்  சிவகுரு பிரபாகரன் அறிவித்துள்ளார்.