ஈமு கோழி மோசடி வழக்கு: குருசாமிக்கு 10 ஆண்டு சிறை, ரூ. 7.89 கோடி அபராதம்!

Spread the love

ஈமு கோழி வளர்ப்பு மூலம் அதிக லாபம் கிடைக்கும் என கூறி, முதலீட்டாளர்களிடம் ஏமாற்றி பணம் பெற்றுக் கொண்ட ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சுசி ஈமு கோழி நிறுவன உரிமையாளர் குருசாமிக்கு, கோவை முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றம் கடும் தண்டனை விதித்துள்ளது.

2011-ஆம் ஆண்டு ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஈமு கோழிகளை வளர்ப்பதன் மூலம் வருமானம் அதிகரிக்கலாம் என அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த வாக்குறுதிகளை நம்பி தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் ஈமு கோழி வளர்ப்பு தொழில்களில் பணம் முதலீடு செய்தனர்.

மூத்த குடிமக்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது சேமிப்புப் பணத்தை சுசி ஈமு நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால், உரிமையாளர் குருசாமி எந்த லாபத்தையும் வழங்காமல், பெரிய அளவிலான மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பொருளாதார குற்றப்பிரிவில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டன.

அதில், சேலத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு முக்கிய வழக்கில் 385 முதலீட்டாளர்களிடம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு உள்ள நிலையில், அந்த வழக்கின் விசாரணை கோவை முதலீட்டாளர் நல நீதிமன்றத்தில் நடைபெற்றது.

வழக்கில் இன்றைய தினம் (ஜூன் 5) தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், குருசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ₹7.89 கோடி அபராதமும் விதித்துள்ளது. மேலும், மேல்முறையீட்டு காலம் முடிந்த பிறகு, அந்த அபராத தொகையை 385 முதலீட்டாளர்களுக்கு பிரித்து வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.