சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகத்தில் வரவிருக்கும் தேர்தல்களைத் தொடர்ந்து அதிமுக தலைமையிலான கூட்டணியே அமையும் என உறுதி கூறினார். இதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில் கூட்டணி அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமித்ஷா, “யாருக்கு எத்தனை தொகுதி என்பதை தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தான் ஆட்சியில் எங்கள் பங்கு என்னவாக இருக்கும் என்பதை விவாதிப்போம். திமுகவை தமிழகத்தில் இருந்து விலக்க செய்வோம்,” என்றார்.
மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலை பாஜக மற்றும் அதிமுக இணைந்து சந்திக்கும் என்றும், தேசிய அளவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலும், மாநிலத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் இந்த கூட்டணி முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அதிமுக எந்தவித கோரிக்கையும் வைக்கவில்லை என்றும், இது இயல்பாக உருவான கூட்டணி என்பதையும் அவர் விளக்கினார். அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிட விரும்பவில்லை என்றும், இந்த கூட்டணி இரு தரப்பினருக்கும் நன்மை பயக்கும் என்றும் அவர் கூறினார்.
அமித்ஷா மேலும், “எந்த நிபந்தனையும் இன்றி பாஜக – அதிமுக கூட்டணி உறுதியாக உள்ளது. சட்டமன்றத் தேர்தலில் இந்த கூட்டணி பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று ஆட்சியமைக்கும்,” என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
Leave a Reply