இன்ஸ்டாகிராமில் பழகி ஐடி பெண்னிடம் 3 1/2 லட்சம் பணம், நகை மோசடி

instagram
Spread the love

கோவை மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய இளைஞரால், ஒரு ஐடி நிறுவன ஊழியரிடம் மூன்றரை லட்சம் ரூபாய் பணமும், எட்டரை பவுன் நகையும் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளம்பெணிடம் தகாத வார்த்தைகளால் பேசியும் அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக கோவை பீளமேடு காவல் துறையினர் சம்பந்தப்பட்ட இளைஞரை கைது செய்துள்ளனர்.

சமூக வலைதளங்களை பயன்படுத்தி மோசடி செய்யும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அறிமுகமில்லாத நபர்களிடம் இணையத்தில் நட்பாக பழகும் போது, தனிப்பட்ட விவரங்களை பகிர வேண்டாம் என பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், காதலின் பெயரில் நம்பிக்கை ஏற்படுத்தி பின்னர் மோசடியில் ஈடுபடும் சிலர், பலரை பாதித்து வருகின்றனர். குறிப்பாக, இன்ஸ்டாகிராம் மூலமாக நடக்கும் மோசடிகள் தற்போது பெரும் அளவில் பதிவாகி வருகின்றன.

இந்த நிலையில், கோவை மாவட்டம் காரமடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண், கோவை டைடல் பார்க்கில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரிடம் இன்ஸ்டாகிராம் வாயிலாக பூ மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த பாக்ய அருண் (29) என்ற இளைஞர் நட்பாக பழகத் தொடங்கினார். தொடர்ந்து, அவர் திருமணம் செய்வதாக ஆசை கூறி காதலாக பழகினார். அருண் தன்னை சுயதொழில் செய்யும் நபராக அறிமுகப்படுத்தியதும், நம்பிக்கை ஏற்படுத்தியதும் பின்னர் அந்த இளம்பெண் அவ்வப்போது அவருக்கு பணம் வழங்கத் தொடங்கினார்.

அருண் தனது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி, அந்த இளம்பெண்ணிடம் இருந்து மெல்ல மெல்ல பணம் பெற்றுள்ளார். முடிவில், மூன்று லட்சத்து 60 ஆயிரம் ரூபாயும், எட்டரை பவுன் நகையும் பெற்றுக்கொண்டுள்ளார். பணத்தை பெற்ற பிறகு, அருணின் நடத்தை மாறத் தொடங்கியது. சில நாட்களுக்குப் பிறகு அவர் அந்த பெண்ணிடம் பேசுவதே தவிர்த்து விட்டார்.

பின்னர், அந்த பெண் தன்னை ஏமாற்றியதை உணர்ந்து, பணமும் நகையும் திருப்பி கொடுக்குமாறு அருணிடம் கேட்டார். ஆனால், அருண் தகாத வார்த்தைகளால் திட்டி, பணத்தையோ நகையையோ திருப்பி கொடுக்க முடியாது என மிரட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் பாக்ய அருணை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.