கோவை தொகுதியில் போட்டியிட்ட பாஜக தலைவர் அண்ணாமலையின் தோல்வியினை பொது மக்கள்,
நடுநிலையாளர்கள், பாஜகவினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைவரும் எதிர் பார்க்காத ஒன்று என்பதால், அவர் சட்டமன்ற, வார்டு, பூத் வாரியாக பெற்ற ஓட்டுக்கள் குறித்து அலசி ஆராய்ந்து வருகின்றனர். அறிவியல் கண்ணோட்டத்துடன், ஆக்கபூர்வமான, ஆழமான அனைத்து கருத்துக்களையும் விரல் நுனியில் வைத்திருக்கும் அண்ணாமலையின் சேவையினை கோவை மக்கள் பயன் படுத்த தவறி விட்டனர் என்ற கருத்தும் நிலவி வருகிறது. தேர்தல் முடிவுகளில் இந்தியாவே எதிர்பார்க்கப்பட்டதொகுதிகளில் ஒன்று கோவை.
கொங்கு மண்டலத்தில் பெரு நகரமாக உள்ள கோவைக்கு பலஅரசியல் வரலாறுகள் அதிகம் உண்டு. இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் ஆர். கே. சண்முகம் செட்டியார் காலம் தொட்டு, இன்று வரை அரசியல் வானில் கோவைக்கு என சிறப்பான இடம் இருந்து வருகிறது.
1952-ம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சேர்ந்த தி.அ. ராமலிங்கம் செட்டியார் போட்டியின்றி தேர்வானார் . 1957-ம் ஆண்டு தேர்தலில் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த பி சுப்பராயனின் மகள் பார்வதி கிருஷ்ணன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றியை தக்க வைத்துக் கொண்டார்.
காங்கிரஸ் சார்பில் 1962 -ல் ராமகிருஷ்ணனும், மார்க்சிய கம்யூனிஸ்ட் சார்பில் கே. ரமணி 1967-லிலும் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றனர்.
தொடர்ந்து 1971 இல் பாலதண்டாயுதன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும், மீண்டும் பார்வதி கிருஷ்ணன் 1973,77-ம் ஆண்டுகளில் கோவை மக்களின் பிரதிநிதியாக இருந்தார்.
இரா. மோகன் 1980ல் திமுக சார்பில்போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1984,89,91 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்ந்த சி. கே. குப்புசாமி வெற்றியினை தக்க வைத்துக் கொண்டார்.
திமுக சார்பில் மு. இராமநாதன் 1996- லும்,1998,99 தேர்தலில் சி.பி. ராதாகிருஷ்ணன் ,பாரதிய ஜனதா கட்சி சார்பில் களம் கண்டு வெற்றியை ஈட்டினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கே. சுப்பராயன் 2009-ம் ஆண்டிலும்,மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பி. ஆர். நடராஜன் 2009-ம் ஆண்டு தேர்தலிலும், 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.பி. நாகராஜன் ஆகியோரும் வென்றனர் .
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த பி. ஆர் .நடராஜன் இரண்டாவது முறையாக வெற்றியை தக்க வைத்துக் கொண்டார்.
தற்போது நடந்த 2024 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கணபதி ராஜ்குமார் எம்பி யாகத் தேர்வாகியுள்ளார்.
திமுக வேட்பாளர்
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை கோவை தொகுதியில், திமுக கூட்டணி கட்சியைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் வேட்பாளர் அல்லது மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் ஆகியோரே வேட்பாளராக போட்டியிடுவர் என்ற நிலை இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சியினரும், தங்களுக்குத்தான் கோவை தொகுதி ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையில் தேர்தல் பணிகளை தொடங்கினர்.
அதேபோல மக்கள் நீதி மய்ய கட்சி நிர்வாகிகளும், தேர்தல் பணியாற்ற தயாராக இருந்தனர்.
இந்த நிலையில் யாரும் எதிர் பார்க்காத வண்ணம் முன்னாள் மேயரும், கோவை மாநகர திமுக அவைத் தலைவருமான கணபதி ராஜ்குமார் களம் இறக்கி விடப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது,கணபதி ராஜ்குமார் வைத்திருந்த விசுவாசமே அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
சிறையில் போடப்பட்ட திட்டம் தற்பொழுது வெற்றிகரமாகி உள்ளது என திமுகவினர் கொண்டாடுகின்றனர்.
பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார் என செய்தி கசியவே, திமுக தலைமை கோவை தொகுதி மீது கவனம் செலுத்த தொடங்கியது. இதனால் கோவை தொகுதி தேசிய அளவில் மிகுந்த முக்கியத்துவமாகி மிகுந்த பரபரப்பானது.
1996-ம் ஆண்டு திமுக சார்பில் மு. இராமநாதன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2014-ம் ஆண்டு திமுக திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கணேஷ்குமார் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.
கணபதி ராஜ்குமார், அதிமுகவில் இருந்த போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அழைப்பின் பேரில் திமுகவுக்கு வந்தவர். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது,கோவையில் உள்ள திமுகவினர் தேர்தல் பணிகளில் ஈடுபடாமல் இருந்தனர்.
கட்சியின் மூத்த நிர்வாகிகளும், அதிமுகவில் இருந்து வந்தவருக்கு சீட்டா? என அதிருப்தியில் இருந்த திமுகவினர், முழு மனசின்றி, தேர்தல் பணிகளில் ஏனோ தான என இருந்தனர்.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ,அறிவிக்கப்பட்டுள்ள திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க உத்தரவிட்டும்,
வாக்கு சதவீதம் குறையும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுத்ததால் கோவை மாவட்டத்தில் உள்ள மாவட்ட செயலாளர்கள் தீவிர களப்பணியில் ஈடுபட்டனர்.
தொழில்துறை அமைச்சர் டி. ஆர் .பி. ராஜா தேர்தல் பொறுப்பாளராக இருந்து, பணிகளை வேகப்படுத்தினார். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலைமை கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மருமகன் ,சபரீசன் கோவைக்கு வந்து தேர்தல் பணிகளை வேகப்படுத்தினார்.
ஸ்டார் வேட்பாளர்
அனைவராலும் அறியப்பட்ட பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்டார் வேட்பாளராக வலம் வந்தார்.
மக்கள் தரிசன யாத்திரை, மேட்டுப்பாளையம் பொதுக்கூட்டம் என இரு முறை பிரதமர் மோடி கோவைக்கு வந்து சென்றதால், பாஜகவினர் வேகமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர்.
கோவையில் ஆண்டுதோறும் 1.26 லட்சம் இளம் பட்டதாரிகள் படித்து வெளியே வருகின்றனர். அவர்களுக்கு கோவையில் வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் பெரிய நிறுவனங்கள் கொண்டு வரப்படும் என அண்ணாமலை பிரச்சார கூட்டங்களில் பேசுவது, உள்ளூர் இளைஞர்களை கவர்கிறது.
500 நாட்களில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது, சாத்தியமானது என பார்க்கப்படுகிறது.
அண்ணாமலை பிரச்சாரத்துக்கு செல்லும் இடங்களில் குழந்தைகள், பெண்கள் அதிக அளவில் கூடுவது,அது தங்களுக்கு வாக்காக மாறும் என பாஜகவினர் திடமாக நம்பினர்.
அதிமுக வேட்பாளர்
பொதுவாக அனைத்து கட்சிகளிலுமே சாதியின் அடிப்படையிலேயே வேட்பாளர்கள் தேர்வு நடைபெறுகிறது.
அந்த வகையில் திமுக, பாஜக வேட்பாளர்கள் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர்களை களம் இறக்கி உள்ளதால், அதற்கு மாற்றாக கோவையில் பெரும்பான்மையினர் வசிக்கும் நாயுடு சமுதாயத்தை சார்ந்த, அதிமுக ஐடி வின் நிர்வாகி சிங்கை ராமச்சந்திரனை அக்கட்சி தலைமை வேட்பாளராக அறிவித்து களம் கண்டது.
கோவை மாநகரில் வசிக்கும் பிற சாதியினரை விட நாயுடு சமுதாயத்தினர் இரண்டரை லட்சம் பேர் இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த சமுதாயத்தினர் வாக்கு மற்றும் அதிமுக வாக்குகளை அறுவடை செய்தால் சிங்கை ராமச்சந்திரனின் வெற்றி உறுதியாக என அதிமுக தலைமை கணித்தது. ஆனால் அவர் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.
கோவையில் 60 சதவீத ஓட்டுக்களை பெற்று வெற்றி பெறுவேன் என அண்ணாமலை நம்பிக்கையுடன் பல இடங்களில் கூறினார்.
“நம்ம கோவை நம்ம அண்ணா “அண்ணாமலைய அலை” என்ற முழக்கத்துடன் கோவையில் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜகவினர் கவனம், சிறுபான்மையினரை தவிர மற்ற அனைவருமே அண்ணாமலைக்கு வாக்களிப்பர் என சமூக வலைத்தளங்களில் பரப்ப பட்டது.
கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களை யாரை கேட்டாலும் அண்ணாமலைக்கே ஓட்டு போட்டதாக கூறினர். அதனால் அவரது வெற்றி பிரகாசமாக இருக்கும் என நம்பப்பட்டது. கோவை மாநகரின் தொழில் வளர்ச்சி, உள்கட்டமைப்பு, சாலை,ரயில்வே, விமான நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட வளர்ச்சிகளை விரும்பிய பல்வேறு கட்சியினரும், பொதுமக்களும், நடுநிலையாளர்களும் அண்ணாமலை வெற்றி பெற்றால், பல திட்டங்கள் உடனடியாக வரும் என நம்பி அண்ணாமலைக்கு வாக்களித்தனர்.
தமிழ் நாட்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்களில் அதிக வாக்குகளைப் பெற்ற அண்ணாமலையின் தோல்வி தமிழக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தாலும் ,மத்தியில் மோடி தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்திருப்பதால்,கோவை தொகுதிக்கு, பல திட்டங்களுக்கு முழு ஆதரவு அளிப்பதோடு, கோவை மக்கள் முன்னேற்றத்திற்காக தமது உழைப்பை இரட்டிப்பாக்குவேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் கோவை எம்பி யாக பதவி வகித்தவர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமரும் வாய்ப்பை பெற்றனர். இதனால் கோவை காண சிறப்பு திட்டங்கள் எதையும் கொண்டு வந்து செயல்படுத்த சூழ்நிலையை இருந்தது.
தற்போதும் எம்பி ஆகியுள்ள கணபதி ராஜ்குமாரும், பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் மட்டுமே வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியும் என்ற நிலை தான் உள்ளது.
கோவை தொகுதிக்கான மாபெரும் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த முடியாத பாராளுமன்ற உறுப்பினர்களாகவே கோவை தொகுதி மக்களுக்கு கிடைக்கின்றனர் என்றாலும், அண்ணாமலைக்கு தோல்வியை பரிசு தந்த கோவை மக்கள்,பாஜக தலைமை அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் அந்தஸ்து அளித்திருக்கிறது.
இதன் மூலம் கோவை மக்களுக்கு பெருமளவிலான வளர்ச்சித் திட்டங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
Leave a Reply