இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடியாக தனது சர்வதேச கிரிக்கெட் ஓய்வை அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் போராடி டிரா செய்தது. போட்டி முடிந்ததும் இந்திய நட்சத்திர வீரர் அஸ்வின் டிசம்பர் 18 ஆம் தேதி தனது ஓய்வை அறிவித்தார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது, ‘தற்போது, நான் ரோகித் பக்கத்தில் அமர்ந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் நான் உங்கள் நேரத்தை அதிகம் எடுக்கப் போவதில்லை. சர்வதேச அளவில் இந்திய கிரிக்கெட் வீரராக. ஒரு கிரிக்கெட் வீரராக என்னில் கிரிக்கெட் கொஞ்சம் மீதம் உள்ளது. அதை உள்நாட்டு மற்றும் கிளப் அளவிலான கிரிக்கெட்டில் அதை பயன்படுத்த விரும்புகிறேன், ஆனால் சர்வதேச அளவில் இதுவே கடைசி நாளாக இருக்கும்.
இந்திய டிரெஸ்ஸிங் ரூமில் இதை எனது கடைசி நாள் என என்னால் சொல்ல முடியும். நான் பலருக்கு நன்றி சொல்ல வேண்டும். பிசிசிஐக்கும் எனது சக வீரர்களுக்கும் நன்றி சொல்லாவிட்டால் நான் எனது கடமைகளில் தவறிவிடுவேன். அவர்களில் சிலரை நான் குறிப்பிட விரும்புகிறேன். எனது கிரிக்கெட் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைத்து பயிற்சியாளர்களும் நன்றி. வீரர்களில் மிக முக்கியமாக ரோஹித், விராட், அஜிங்க்யா, புஜாரா போன்றவர்கள் எனக்கு ஆதரவாக இருந்தவர்கள். அவர்கள் எனது பவுலிங்கில் பல கேட்சுகளை எடுத்தவர்கள் மற்றும் எனக்கு பல விக்கெட்டுகளை வழங்கியவர்கள். பல ஆண்டுகளாக கடுமையான போட்டியாளர்களாக இருந்த ஆஸ்திரேலிய அணிக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன் என்று கூறியிருந்தார்.
பின்னர், 19 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் இருந்து தாய்நாடு திரும்பினார் ரவிச்சந்திரன் அஸ்வின். அவர் சென்னை திரும்பியதும் செய்தியாளர்களிடத்தில் அஸ்வினின் தந்தை பேசுகையில், ‘அஸ்வினின் ஓய்வை குறித்து எங்களுக்கும் கடைசி நேரம் தான் தெரியவந்தது. அவன் மனதில் என்ன எண்ணம் இருந்தது என்று எங்களுக்கு தெரியவில்லை. அவர்தான் திடீரென ஓய்வை அறிவித்தார். அதையும் நாங்கள் முழு மனதுடனும் மகிழ்ச்சியுடனும் ஏற்றுக்கொண்டோம்.
ஆனால் அவர் ஓய்வு பெற்ற விதத்தில் நாங்கள் மகிழ்ச்சி அடையவில்லை. ஏனென்றால் அந்த தொடரை அவர் தொடர்ந்து விளையாடி இருக்க வேண்டும். அவமானம் தான் ஒரு காரணமாக இருக்கும்: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது அவரது விருப்பமும் அவரது ஆசையும் கூட. அதில் நாங்கள் தலையிட முடியாது. அவரின் ஓய்வு முடிவு எமோஷனலானது. ஏனென்றால், கடந்த 14 முதல் 15 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். ஆனால் நீண்ட காலத்திற்கு அவமானத்தை தாங்கி கொண்டிருக்க முடியாது. அதனால் ஓய்வு முடிவை எடுத்திருக்கலாம். சிறுவயதில் பயிற்சிக்காக பைக்கில் ஏற்றி சென்று மைதானத்தில் விடுவேன். அதனை கடந்து பெரிதாக கிரிக்கெட்டில் தலையிட்டதில்லை. ஆனால் படிப்பு, கிரிக்கெட் இரண்டிலும் அஸ்வினை கவனம் செலுத்த ஆதரவாக இருந்தோம் என்று தெரிவித்திருந்தார்.
தந்தையின் இந்த பேட்டியை கேட்டு அஸ்வின் சற்று அதிர்ந்து போனார். இதற்கு அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில், டேய் தகப்பா.. என்னடா இதெல்லாம்.. அவரின் பேச்சை மன்னிக்கவும்.. அவருக்கு செய்தியாளர்களிடம் பேசிய அனுபவம் இல்லை ‘என்று பதில் அளித்துள்ளார்.
அவமானப்படுத்தியதால் அஸ்வின் ஓய்வா? டேய் தகப்பா… என்ன இதெல்லாம்… தந்தை பேட்டிக்கு அஸ்வின் ரியாக்ஷன்

Leave a Reply