,

அரசை துறந்து துறவறம் பூண்ட பத்திரகிரியார்

pathirakiriiyar
Spread the love

பத்திரகிரியார் என்ற பெயரில் பட்டினத்தாரின் சீடராக இருந்தவரின் இயற்பெயர் பர்த்ருஹரி. உஜ்ஜனியின் மாகாளம் என்ற பகுதியின் அரசராக இருந்தவர். அரசராக இருந்தாலும், சிவபக்தியில் சிறந்தவர். ஒரு நாள் அவருடைய அரண்மனையில் புகுந்த திருடர்கள், விலையுயர்ந்த ஆபரணங்களை எல்லாம் கொள்ளையடித்துச் சென்றனர். செல்லும் வழியில் இருந்த ஒரு விநாயகர் கோயிலில், தாங்கள் கொள்ளையடித்து வந்த ஆபரணங்களில் ஒரு மாணிக்கமாலையை விநாயகருக்குக் காணிக்கையாக வீசிவிட்டுச் சென்றனர்.
அந்த மாணிக்கமாலை விநாயகரின் கழுத்தில் விழுவதற்கு பதிலாக, அங்கே நிஷ்டையில் இருந்த பட்டினத்தாரின் கழுத்தில் விழுந்தது. விடிந்ததும் கொள்ளை போன செய்தியை அறிந்த பத்ருஹரி, வீரர்களை நாலாபுறமும் அனுப்பி, கொள்ளையர்களைத் தேடச் சொன்னார்.
வீரர்களின் பார்வையில், கோயிலில் நிஷ்டையில் இருந்த பட்டினத்தாரையும், அவர் கழுத்தில் இருந்த மாணிக்கமாலையையும் பார்த்து, அவர்தான் திருடன் என்று நினைத்து கைதுசெய்து அழைத்துச் சென்றனர். பத்ருஹரியும் தீர விசாரிக்காமல் பட்டினத்தாரைக் கழுவில் ஏற்றும்படி உத்தரவிட்டார்.
வீரர்கள், பட்டினத்தாரைக் கழுமரத்தின் அருகே கொண்டு சென்றனர். அப்போது பட்டினத்தார், ‘என் செயலாவது ஒன்றுமில்லை’ என்று தொடங்கும் பாடலைப் பாடியதும், கழுமரம் தீப்பற்றி எரிந்தது. செய்தியைக் கேள்விப்பட்ட பத்ருஹரி ஓடி வந்து, பட்டினத்தாரின் பாதங்களைப் பணிந்து, தமக்கு தீட்சை கொடுத்து சீடராக ஏற்றுக்கொள்ளும்படி பிரார்த்தித்தார். பத்ருஹரியின் மனப் பக்குவத்தை உணர்ந்த பட்டினத்தார், அவருக்கு தீட்சை வழங்கினார். அவரே பத்திரகிரியார்.
குருவின் கட்டளைப்படி திருவிடைமருதூர் வந்து துறவு வாழ்க்கையை மேற்கொண்டார் பத்திரகிரியார். மகாலிங்கேஸ்வரர் கோயிலின் மேற்கு கோபுர வாசலில் இருந்துகொண்டு, தினமும் பிச்சை ஏற்று குருவுக்கு சமர்ப்பித்த பிறகே, தான் உண்டு வந்தார். ஒருநாள் அவர் அப்படித் தன் குருவுக்கு சமர்ப்பித்துவிட்டு, உணவை உண்ணும் வேளையில், பசியால் வாடிய ஒரு நாய் அவருக்கு முன்பாக வந்து நின்றது. நாயின் பசியைக் கண்ட பத்திரகிரியார், அதற்குச் சிறிது உணவு கொடுத்தார். அதுமுதல் அந்த நாயும் அவருடனேயே தங்கிவிட்டது.
அந்த நாய் முற்பிறப்பில் ஒரு விலைமகளாக இருந்தவள். தான் செய்த பாவங்களின் பலனாக இந்தப் பிறவியில் நாயாகப் பிறந்திருந்தாள். பத்திரகிரியார் அந்த நாயைப் பாதுகாத்து வந்தார். இந்த நிலையில் பட்டினத்தார் திருவிடைமருதூர் கோயிலை அடைந்து, கிழக்கு கோபுர வாசலில் அமர்ந்து சிவபெருமானைத் தியானித்த படி இருந்தார். ஒருநாள் பட்டினத்தாரின் பூர்வாசிரமப் பிள்ளையான மருதவாணன் ஓர் ஏழை வடிவம் கொண்டு பட்டினத்தாரிடம் பிச்சை கேட்டார். அதற்கு பட்டினத்தார், ‘’மேலைக் கோபுர வாசலில் ஒரு குடும்பஸ்தன் இருக்கிறான். அங்கே செல்வாய்’’ என்று கூறி அனுப்பினார்.
மருதவாணனும் மேற்கு கோபுரத்துக்குச் சென்று அங்கிருந்த பத்திரகிரியாரிடம், ‘’ஐயா, எனக்குப் பசியாக இருக்கிறது. கிழக்குக் கோபுரத்தில் இருந்த ஒருவரிடம் பசிக்கு அன்னம் கேட்டபோது, அவர் மேற்கு கோபுரத்தில் ஒரு குடும்பஸ்தன் இருப்பதாகச் சொல்லி என்னை இங்கே அனுப்பினார்’’ என்று கூறினார்.
உடனே பதறிப்போன பத்திரகிரியார், ‘ஐயோ, இந்தப் பிச்சை எடுக்கும் ஓடும், நாயும் என்னைக் குடும்பஸ்தனாக ஆக்கிவிட்டதே’ என்று வருந்தி, பிச்சையோட்டை நாயின் மேல் விட்டெறிந்தார். அது நாயின் தலையில் பட்டு இறந்து போனது.
பத்திரகிரியாரின் தொடர்பு காரணமாக அந்த நாய் அடுத்த பிறவியில் காசி அரசருக்குப் பெண்ணாகப் பிறந்தாள். அவளுக்குத் திருமணப் பருவம் வந்ததும், அரசன் வரன் தேட முயன்றபோது, “அப்பா, நான் யாருக்கும் உரியவள் இல்லை. திருவிடைமருதூர் கோயிலின் மேற்கு கோபுர வாசலில் அமர்ந்திருக்கும் தவ முனிவருக்கே உரியவள்’’ என்று கூறினாள். அரசரும் பெண்ணின் மன உறுதியைக் கண்டு, திருவிடைமருதூருக்கு அழைத்துச் சென்றார்.
பத்திரகிரியாரைக் கண்டு வணங்கிய அரசகுமாரி, ‘’தங்களின் அடிநாய் வந்திருக்கிறேன். என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்’’ என்று வேண்டினாள். பத்திரகிரியார் அவளை அழைத்துக்கொண்டு கிழக்குக் கோபுரத்துக்கு வந்து, தம்மை ஆட்கொண்ட பட்டினத்தாரிடம், ‘’குருவின் எச்சில் உண்ட நாய்க்கு இழிபிறவி எய்தலாமா? எங்களுக்கு முக்திநிலை கிடையாதா?’’ என்று கேட்டார். உடனே பட்டினத்தார், “எல்லாம் சிவன் செயல்’’ என்றுகூறி, சிவபெருமானை தியானம் செய்தார். அப்போது அங்கே தோன்றிய பேரொளி, பத்திரகிரியாரையும் அரசகுமாரியையும் தன்னுள் ஐக்கியப்படுத்திக்கொண்டு மறைந்தது.