கோவையின் உள்ள மத்திய உணவுக் கிடங்கில் அமைந்துள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சிலைக்கு, பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்ததுடன், பா.ஜ.க. பல்வேறு நிகழ்வுகளை மாநிலம் முழுவதும் ஏற்பாடு செய்துள்ளதாக கூறினார்.
அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி, நேற்று மாநிலம் முழுவதும் அவரது சிலைகள் அமைந்துள்ள இடங்களில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு, அவரின் புகைப்படங்கள் தீப விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று, பல்வேறு பகுதிகளில் அம்பேத்கரின் உருவபடத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்வுகள் நடைபெற்றுவரும் நிலையில், அரசாங்க நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன.
பா.ஜ.க. அரசு, அம்பேத்கரின் நினைவுகளை கொண்டாடும் வகையில், அவரது பிறந்த இடம், கல்வி பயின்ற லண்டன், புத்த மதம் ஏற்ற தீக்ஷா பூமி, இறுதி பயணம் மேற்கொண்ட இடம் போன்ற ஐந்து முக்கியமான இடங்களில் மணிமண்டபம் மற்றும் நினைவகங்கள் கட்டி, உலகளாவிய ரீதியில் அவரது புகழை பறைசாற்றி வருகிறது.
மத்திய அரசு தொடங்கிய ‘பீம் ஆப்’ உள்ளிட்ட பல திட்டங்கள், அம்பேத்கரின் பெயரை வைத்து மக்களுக்கு பயனளிக்கின்றன. டெல்லியில் அவரது பெயரில் ஒரு பன்னாட்டு மையம் அமைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கோவையின் சட்டமன்ற உறுப்பினராக, வானதி சீனிவாசன் பல்வேறு கோரிக்கைகளை சட்டமன்றத்தில் முன்வைத்து வருவதாகவும், சாலைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி உண்மையில் பயனடையவில்லை என்பதை மக்களுக்கு தெரியும் என்றும் கூறினார். மக்களுக்காக அரசாங்கம் செயல்பட வேண்டும் என்பதே தனது அடிப்படை கோரிக்கை எனவும் தெரிவித்தார்.
பாஜகவின் புதிய மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குறித்து, அவர் ஒரு அனுபவமிக்க அரசியல்வாதி என்றும், கட்சித் தொண்டர்கள் அனைவரும் அவருடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளனர் என்றும் வானதி சீனிவாசன் நம்பிக்கை தெரிவித்தார்.
தலைவர்களின் மாற்றம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “இன்னும் பிறந்த குழந்தையை வீடு கொண்டு வராத நேரத்தில், இரண்டாவது குழந்தையோடு முதலாமிடம் ஒப்பிட முடியாது” என சொல்லிச் சிரித்தார்.
தன்னைப்பற்றி பேசும் போது, வானதி சீனிவாசன், பதவிக்காக ஒருபோதும் விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும், கட்சி என்ன பொறுப்பை கொடுக்கிறதோ அதை நம்பிக்கையோடு ஏற்று செயல்படுகிறேன் என்றும் கூறினார். கட்சியின் வளர்ச்சியைப் பார்க்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க கூட்டணி சிறப்பாக செயல்படுகிறது என்றும், 2026ல் திமுகவை ஆட்சியிலிருந்து மாற்றுவது என்ற ஒரே நோக்கத்துடன் இந்த கூட்டணி செயல்படுகிறது என்றும் கூறினார்.
அண்மையில் கூட்டணி தொடர்பாக எழுந்த கேள்விகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து, மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வழிகாட்டுதலின் கீழ் கூட்டணி சிறப்பாக செயல்படும் என்ற நம்பிக்கையை வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
பொது இடத்தில் அம்பேத்கரின் சிலை வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மாநில அரசிடம் வைக்க தயாராக உள்ளதாகவும், சட்டமன்ற உரைகள் இடைமறிக்கப்படுவது தொடர்பாகும் பேரவை தலைவரின் செயல்பாடு தொடர்பாகவும் தனது அதிருப்தியைத் தெரிவித்தார்.
தன்னுடைய உரைகள் முழுமையாக வெளியிடப்படவில்லை என்பதையும், உரைகளை தொகுக்கும் எடிட்டருக்கு “ஆஸ்கார் விருது” கொடுக்கவேண்டும் என விமர்சனம் செய்தார்.
என்.டி.ஏ கூட்டணியில் மேலும் பல கட்சிகள் வரவுள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் வெற்றிக் கூட்டணி யார் என்பதை மக்கள் தெளிவாக உணர்வார்கள் என்றும் கூறினார்.
அத்துடன், OPS என்.டி.ஏயில் உள்ளாரா என்ற கேள்விக்கு, “மத்திய அமைச்சர் கூறிய பதிலை தான் எடுத்துக்கொள்ளுங்கள்” என நகைச்சுவையாக பதிலளித்தார்.
Leave a Reply