​அமைச்சர் நேருவின் தம்பி மணிவண்ணன் வீட்டில் அமலாக்கத்துறையின் அதிரடி சோதனை

kn nehru
Spread the love
கோவை மாவட்டம் மசக்காளிபாளையத்தில், அமைச்சர் கே.என். நேருவின் தம்பி மணிவண்ணன் வீடு அமலாக்கத்துறை அதிகாரிகளால் சோதனைக்குள்ளாகியுள்ளது. இந்த சோதனை திங்கள்கிழமை காலை தொடங்கிய நிலையில், அப்பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

முற்பகலில் 3 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், கோவை சிங்காநல்லூர் அருகேயுள்ள டி.வி.எச் ஏ காந்தா அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மணிவண்ணனின் வீட்டில் சோதனை நடத்தினர்.

இதேபோன்று, சென்னையிலும் தி.மு.க அமைச்சர் கே.என். நேருவின் சகோதரரும், டி.வி.எச் கட்டுமான நிறுவனத்தின் பங்குதாரருமான ரவிச்சந்திரன் மற்றும் நேருவின் மகன் அருண் நேருவின் வீடுகளிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

டி.வி.எச் நிறுவனம் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கட்டுமானத் துறையில் செயற்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் “ட்ரூ வேல்யு ஹோம்” என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்து வருகிறது.

கோவை திருச்சி சாலை, அவிநாசி சாலை போன்ற முக்கிய பகுதிகளில் டி.வி.எச் நிறுவனத்தின் வீட்டு திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிறுவனத்தின் நிர்வாகத்தைக் காண்பது அமைச்சரின் தம்பி மணிவண்ணன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இதே நிறுவனத்தை மையமாகக் கொண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் பல இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டு வருவதால், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.