,

அதிமுக என்பது தாய் வீடு – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி

sp velumani
Spread the love

சிங்காநல்லூர் பகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளருமான சிங்கை ராமச்சந்திரனின் தந்தையுமான சிங்கை கோவிந்தராஜனின் 25 வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “யாரெல்லாம் கட்சிக்கு விசுவாசமாக  இருக்கிறார்களோ  அவர்களுக்கு எல்லாம் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. யுடியூபில், சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல் வருகிறது. அதையெல்லாம் நான் பார்ப்பதில்லை. ஆனால் அந்த தகவலை பார்த்து அண்ணன் அம்மன் அர்ச்சுணன் கோவப்பட்டார். அதை பற்றியெல்லாம் பேசினால் நமக்கு நேரம் வேஸ்ட். திமுக – அதிமுக ஒன்று சேராது, காங்கிரஸ் – பாஜக ஒன்று சேராது, அதே போல தான், ஏன் நாம் இதையெல்லாம் பேச வேண்டும். அம்மா பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 30 ஆண்டுகளாக நானே ரத்த தானம் செய்து வருகிறேன்.

நேற்று முன் தினம் தான் இரத்த தானம் செய்தேன். அதிமுக என்பது தாய் வீடு. அனைவரும் தாய் வீட்டுக்கு தான் வருவார்கள் யாரும் வெளியே போகமாட்டார்கள். மேலும் அதிமுக உலகிலேயே 7ஆவது பெரிய கட்சி, இது நம்ம கட்சி. சாதாரண குடும்பத்தில் பிறந்த  நம்மை எம்.எல்.ஏ வாக, அமைச்சராக மாற்றி அழகு பார்த்தவர் அம்மா. வெறும் 3 , 4 சதவீதம் வாக்காளர்கள் உள்ள பாஜகவில் நாம் சேர போகிறோம் என்று கூறினால் நாம் பதில் கூற வேண்டுமா?

அதிமுக தமிழகத்தில் 35 முதல் 40 சதவீத வாக்காளர்கள் உள்ள கட்சி, இதற்கெல்லாம் பதில் கூற வேண்டாம் அம்மன் அர்ச்சுணன் அவர்களே, டோன் கேர் என விட்டுச் செல்லுங்கள், கவலை படாதீர்கள். நம்மை பற்றி தொண்டர்களுக்கு தெரியும் மக்களுக்கும் தெரியும். இப்போது கோவையில் உள்ள அம்மன் கே.அர்ச்சுணன், கே.ஆர்.ஜெயராம், கந்தசாமி உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் இரண்டு முறை எம்.எல்.ஏ வாக ஆக்கியுள்ள இந்த கட்சியை விட்டு வெறும் 3, 4 சதவீத கட்சியான பாஜகவிற்கு போவார்களா?

பல்வேறு வளர்ச்சி பணிகளை  செய்துள்ள நமக்கு காலரை தூக்கி சென்று நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகளை கேட்கும் தகுதி உள்ளது.  அவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை என்றும் எடப்பாடியாருக்கு அனைத்து தொகுதிகளிலும் வெற்றியை தேடி தருவது தான் லட்சியம். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுணன், கே.ஆர்.ஜெயராமன் மற்றும் சூலூர் கந்தசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.