விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ”அண்ணா பல்கலைக்கழக விவகாரம் மிகுந்த வேதனைக்குரியது. இதில் தொடர்புடைய குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது. அந்த குற்றச்செயலில் தொடர்புடையவர்கள் வேறு யாராக இருந்தாலும் அனைவருமே கைது செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு உடனடியாக பிணை வழங்காமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து சிறைக்குள் வைத்திருந்தே விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
அண்ணாமலை பரபரப்பான அரசியல் செய்ய விரும்புகிறார். தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக எதிர்க்கட்சி அல்ல பாஜக தான் எதிர்க்கட்சி என்று காட்டுவதற்கு பெரிதும் அவர் முயற்சிக்கிறார். எனவே ஆளும் கட்சியினர் மீது அவ்வப்போது குற்றம் சாட்டினால் தான் எதிர்க்கட்சியாக எதிர்க்கட்சித் தலைவராக ஆக்கிக் கொள்ள முடியும் என்று அவர் நம்புகிறார்.
கைது செய்யப்பட்ட ஞானசேகரன் அரசியல் கட்சித் தலைவர்களுடன் புகைப்படம் எடுத்திருக்கிறார் என்ற காரணத்தை கூறி அதற்கு திமுக பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுவது அப்பட்டமான அரசியல் ஆதாய அரசியல். குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டு இருக்கின்ற சூழலில் இவ்வாறு அரசின் மீது குற்றம் சாட்டுவது ஏற்புடையது அல்ல.
அண்ணாமலைக்கு லண்டன் போய் வந்த பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை. அவர் ஏன் இப்படிப்பட்ட முடிவை எல்லாம் எடுக்கிறார். இது வருத்தம் அளிக்கிறது. தன்னைத் தானே வருத்திக் கொள்ளும் அகிம்சா வழி முறை என்பது காந்தியடிகளைப் போல கையில் எடுக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் காந்தியடிகள் கூட இப்படிப்பட்ட போராட்டங்களை அறிவித்தது இல்லை. அவருடைய போராட்ட அறிவிப்புகள் நகைப்புக்குரியவையாக மாறிவிடக்கூடாது. ” என்று பேசினார்.
Leave a Reply