நீரின்றி அமையாது உலகு ….
ஆம்..! தண்ணீர் இல்லாவிட்டால், இயங்க முடியாது. இந்த உலகம் தண்ணீர் இன்றி செழிப்பாகவோ, வளம் மிக்கதாகவோ இருக்க இயலாது. அதனால் தான் நீரின் பெருமையினை தமிழ் மூதாட்டி அவ்வையார் முதல் இன்றைய அறிஞர்கள் வரை போற்ற வேண்டுமென அறிவுறுத்துகின்றனர். பருவ மழை ,பருவம் தவறாமல் பொழிந்தால், நாடும், வீடும் நலம் பயக்கும்.
கடந்த ஆண்டு பருவ மழை பெய்ய தவறியதன் காரணமாக,பெரும் இன்னலுக்கு ஆளாகி, விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பெரும் சிரமப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது தென்மேற்கு பருவ மழை பெய்து வருவதால்,
கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் நிறைந்து மகிழ்ச்சியாக காணப்படுகிறது.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, கேரளா மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆனைகட்டி அருகே உள்ள சிறுவாணி அணை, மேட்டுப்பாளையம் அடுத்துள்ள பில்லூர் அணை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆறியாறு அணை ஆகிய ஆகிய அணைகள் தனது முழு கொள்ளளவு நிரம்பி உள்ளது . கோவையின் பிரதான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் சிறுவாணி அணையின் மொத்தமுள்ள 45 அடியில் 43 அடி நீரின் அளவு எட்டியுள்ளதால், பாதுகாப்பு காரணம் கருதி ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கோவை, மாவட்டம், திருப்பூர் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் பில்லூர் அணை மொத்தமுள்ள நூறுடியை கடந்த 17-ம் தேதியே தொட்டு விட்டதால், அணையில் இருந்து நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டனர்.கோவை நகர் பகுதிகளில் சுற்றியுள்ள குளங்களும் வேகமாக நிரம்பி வருகிறது. நொய்யல் ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், சித்திரை சாவடி அணை நிரம்பி கிழக்குப் பகுதியில் வெள்ளமாக செல்கிறது. குனியமுத்தூரில் உள்ள செங்குளம், குறிச்சி குளம் ஆகியவையும் வேகமாக நிரம்பி வருகிறது. உக்கடம் பெரிய குளத்திற்கு தண்ணீர் வரும் பாதையில் ஆகாயத்தாமரை வளர்ந்து நிற்பதால், அக்குளத்துக்கு தண்ணீர் மெதுவாகவே செல்கிறது. வாலாங்குளம் சற்றே நிரம்பி வருகிறது. சிங்காநல்லூர் குளத்துக்கு தண்ணீர் வந்து கொண்டு உள்ளது.
10,12 சென்டி மீட்டர் பெய்தாலே கோவை பகுதியில் உள்ள குளங்கள் நிரம்பி விடுகிறது. இதற்கு அணைகள் தூர் வாராததே காரணம் என கூறப்படுகிறது. பில்லூர் அணையை தூர் வருவதற்கான ஆய்வினை தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, அதிகாரிகளுடன் கடந்த மாதம் மேற்கொண்டார். தொழில்நுட்ப அடிப்படையில் அணையை தூர்வாருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. இதே போல மற்ற அணைகள், குளங்களை ஆண்டுக்கு ஒரு முறை தூர் வாரினால்,மழை நீர் நிரம்பி, கோடைகாலங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாத நிலை உருவாகும். ஆகவே, தூர்வாரும் பணியினை ஆண்டுக்கு ஒரு முறை மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். சுற்றுலா பகுதியான கோவை குற்றாலத்தில், வேகம் எடுத்து வரும் அருவியால்,பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், கோவை குற்றால அருவியில் பெரிய கற்கள், மரக்கிளைகள் அடித்துக் கொண்டு வருவதால், வனத்துறை தடை விதித்துள்ளது.
Leave a Reply