மச்சேந்திரர் சிறிது திருநீற்றை கொடுத்து “இதனை நீ உட்கொள்வாயானால் மகட்பேற்றை அடைவாய்” என்று கூறிவிட்டுச் சென்றார். தான் திருநீறு பெற்ற செய்தியை அவள் அண்டைவீட்டுப் பெண்ணிடம் கூறினாள்.
அவளோ “உனக்கு விபூதி கொடுத்தவர் போலித் துறவியாய் இருந்தாலும் இருக்கலாம். எனவே நீ அவ்விபூதியை உட்கொள்ளாதே” என்று சொன்னாள். இதனால் அச்சமடைந்த அப்பெண், தான் பெற்ற திருநீற்றை அடுப்பில் கொட்டினாள்.
சில ஆண்டுகள் சென்றபின் மச்சேந்திரர் மீண்டும் அவ்வூருக்கு வந்தார். தான் முன்பொரு சமயம் பிள்ளைப் பேற்றிற்காக திருநீறு அளித்த பெண் வீட்டிற்கு சென்று “அம்மணி, உன்னுடைய மகனை நான் பார்க்க வேண்டும். அவனை அழைப்பாயாக”, என்று கூறினார்.
பக்கத்துவீட்டு பெண் பேச்சைக் கேட்டு அன்புடன் அளித்த விபூதியை உண்ணாமல் அடுப்பில் போட்டுவிட்டு, இப்பொழுது மகன் இல்லாமல் வருந்தும் நிலையை கூறி தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள் அப்பெண்.
மச்சேந்திரர், ‘’சரி அந்த விபூதியை எங்கு கொட்டினாய்,’’ என்று கேட்டார். அவளும் அந்த விபூதி இருந்த அடுப்பின் சாம்பலைக் காட்டினாள். மச்சேந்திரர் அடுப்பின் பக்கத்தில் நின்று “கோரக்கா” என்று கூப்பிட்டார். அடுப்புச் சாம்பலில் இருந்து குழந்தை ஒன்று சித்தர் திருநீறு கொடுத்த காலம் முதல் இருக்கவேண்டிய வளர்ச்சியோடு வெளிப்பட்டது. அந்த கோதார அடுப்பின் சாம்பலில் இருந்து வெளிப்பட்டதால், கோரக்கர் என்று பெயரிட்டு சீடனாக ஏற்றுக் கொண்டார்.
ஒருநாள் கோரக்கர் ஒரு வீட்டிற்குச் சென்று பிச்சை கேட்டார். அந்த வீட்டுப் பெண்மணி ஒரு வடையை கொடுத்தாள். அந்த வடையை கோரக்கர் மச்சேந்திரருக்கு கொடுத்தார்.
வடையைத் தின்ற மச்சேந்திரர் மறுநாளும் அதே போன்ற வடை வேண்டும் என்று கேட்டார். கோரக்கரும் மறுநாள் வடை தந்த வீட்டிற்கே பிச்சை கேட்டு சென்றார். ஆனால் அப்பெண்ணோ வடை இல்லை என்று சொல்லி சாதம் போட்டாள். ஆனால் கோரக்கரோ தன் குருவிற்கு வடைதான் வேண்டும் என்று கேட்டார். அந்தப் பெண்ணிற்கு கோபம் வந்தது. எது இருக்கிறதோ அதைத் தானே போடமுடியும், என்றாள்.
‘’உன் குரு வடை கேட்டதால் போயிற்று; இதுவே உன்னுடைய கண்ணை வேண்டுமென்று கேட்டால் தருவாயா,’’ என்றாள். இதனைக் கேட்ட கோரக்கர் ‘’என்னுடைய குருநாதர் என் கண்ணைக் கேட்டாலும் தருவேன். அந்த கண்ணை நீயே பெற்றுக் கொண்டு வடையைக் கொடு,’’ என்று கூறி தன்னுடைய கண்ணை பெயர்த்து அப்பெண்ணிடம் கொடுத்தார்.
இதைக் கண்ட அப்பெண் அச்சம் கொண்டு உடனே இனிமையான வடைகளை நெய்யில் சுட்டுக் கொடுத்தாள். வடையை கோரக்கர் தம்முடைய குருவிற்களித்தார். வடைகளைச் சுவைத்த மச்சேந்திரர், கோரக்கரை பார்த்து உன்னுடைய கண் எங்கே என்று கேட்க கோரக்கர் நிகழ்ந்ததைக் கூறினார்.
கோரக்கர் தன் மேல் வைத்த அன்பை உணர்ந்த மச்சேந்திரர் இழந்த கண்ணை திரும்பப் பெறுமாறு செய்தார்.இவர் தமது இளம் வயதினை கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் கழித்தார். இவரது பிறப்பிடம் எனினும் வடநாட்டில் திருத்தலமான புருடன்குடி எனப்படும் இன்று பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரத்தில் அமைந்து உள்ளது.
கோரக்கரின் தொடர்புடைய பிற மடங்களாகப் பேரூர், திருச்செந்தூர் மற்றும் இலங்கையில் உள்ள திருக்கோணமலை உள்ளது. கோரக்கர் குகைகள் சதுரகிரி மற்றும் கொல்லி மலைகளில் காணப்படுகின்றன. மற்ற சித்தர்களைப் போலவே, கோரக்கர் மருத்துவம், தத்துவம் மற்றும் ரசவாதம் குறித்த பாடல்களையும் எழுதியுள்ளார்.[1]
கோரக்கர் எதிர்கால நிகழ்வுகளை முன்னறிவித்து சந்திரரேகை நூலில் எழுதியுள்ளார். இவர் கணித்த அத்தகைய ஒரு நிகழ்வு என்னவென்றால், மக்கள் கடவுள் மீதான நம்பிக்கையை இழக்கும்போது போகர் மீண்டும் உலகில் பிறப்பார்.
இவர் நீண்ட காலம் தங்கியிருந்த கோரக்கரின் குகை தமிழ்நாட்டின் சதுரகிரி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. நாகையிலிருந்து வேளாங்கண்ணி செல்லும் சாலையில் 2கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வடக்குப் பொய்கை நல்லூர். இங்குதான் கோரக்கச் சித்தர் ஜீவசமாதி கொண்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மெய்யன்பர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார்.
Leave a Reply