கோவை: கோவை ஜிடி தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தின் மாணவி அஸ்வினி பேபி ஆச்சார்யா, தேசிய தொழிற்பயிற்சி கவுன்சில் நடத்திய அகில இந்திய வர்த்தக தேர்வில் சிறப்பான சாதனை படைத்துள்ளார். டூல் அண்ட் டை மேக்கர் (டைஸ் அண்ட் மோல்ட்ஸ்) (என்எஸ்கியூஎஃப்) பாடப்பிரிவில் பெண் மாணவர் பிரிவின் கீழ் அகில இந்திய அளவில் முதல் இடம் பெற்றுள்ளார்.
ஆகஸ்ட் 2024 இல் நடத்தப்பட்ட
இறுதித் தேர்வில் அஸ்வினி 88 சதவீத மதிப்பெண்களைப் பெற்று, தனது திறமையை நிரூபித்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு பாடப்பிரிவுகளில் 29 மாணவர்கள் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளனர். அவர்களில் ஒருவரான அஸ்வினி, சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வரிடமிருந்து சிறப்பு விருதைப் பெற்றுக் கொண்டார்.
பொதுவாக ஆண்கள் அதிகம் ஈடுபடும் டூல் மேக்கிங் துறையில் பெண் மாணவியாக சாதனை படைத்துள்ள அஸ்வினி, அட்வான்ஸ்டு டூல் மேக்கிங் மற்றும் டூல் டிசைன் ஆகியவற்றை தொடர்ந்து படிக்க திட்டமிட்டுள்ளார். கோயம்புத்தூரைச் சேர்ந்த இவரது தந்தை கணபதி, சிறிய பட்டறை ஒன்றை நடத்தி வருகிறார். குடும்பத்தின் மூத்த மகளான அஸ்வினி, தந்தையின் பட்டறையில் அவ்வப்போது உதவி வருகிறார்.
இத்துறையில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் சிறந்த வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு டூல் மேக்கிங்கில் ஜெர்மன் டிஐஎச்கே “A” சான்றிதழ் தேர்வில் பங்கேற்க அஸ்வினி திட்டமிட்டுள்ளார். இது அவரது வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சாதனை மூலம், பெண்களும் தொழில்நுட்பத் துறைகளில் சிறந்து விளங்க முடியும் என்பதை அஸ்வினி பேபி ஆச்சார்யா நிரூபித்துள்ளார். இது மற்ற மாணவிகளுக்கும் ஊக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply